அண்மையில் தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பேருந்தில் பயணிப்பதற்காக ஏறிய காவலர் ஒருவர், நான் போலீஸ் டிக்கெட் எடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். அதற்கு நடத்துநர் நீங்கள் டிக்கெட் எடுக்கவில்லை என்றால் வாரண்டை கொடுங்கள். வாரண்ட் இல்லாமல் உங்களை அழைத்துச் செல்ல முடியாது. வாரண்ட் இல்லையென்றால் பயணச்சீட்டு எடுத்தாக வேண்டும் என்று கூறினார். நடத்துநர் மற்றும் காவலர் இடையேயான இந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இது தொடர்பாக விளக்கம் அளித்த தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் அரசுப் பேருந்துகளில் காவலர்கள் வாரண்ட் இல்லாமல் இலவசமாக பயணிக்க அனுமதி கிடையாது என அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசுப் பேருந்துகளை குறிவைத்து காவலர்கள் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
அதன்படி சென்னை கிளாம்பாக்கம் பகுதியில் அரசுப் பேருந்து ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்தி பயணிகளை இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போக்குவரத்து காவலர்கள் இது நோ பார்க்கிங் ஏரியா இங்கு ஏன் பேருந்தை நிறுத்தினீர்கள் என்று கேள்வி எழுப்பியதோடு, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியதற்காக ரூ.500, மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூடுதலாக ரூ.500 அபராதம் விதித்தனர்.
இதே போன்று அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பயன்படுத்தியதற்காகவும் அரசுப் பேருந்துகள் திடீரென வழிமறித்து அபராதம் விதிக்கப்பட்டன. இந்த வரிசையில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அரசுப் பேருந்துகளை தணிக்கை செய்த போக்குவரத்து காவலர் ஓட்டுநர் சீட் பெல்ட் அணியவில்லை என்று கூறி 3 ஓட்டுநர்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போக்குவரத்துத்துறை மற்றும் காவல் துறையினர் இடையேயான மோதலால் இரு துறை அதிகாரிகளும் முறையாக பணியில் கவனம் செலுத்த இயலாது என்று குற்றம் சாட்டும் ஆர்வர்கள் இரு துறை அதிகாரிகளும் இது தொடர்பாக பேசி சுமூக தீர்வு எட்டும் பட்சத்தில் பொதுமக்கள் எவ்வித இடையூறும் இன்றி பயணம் செய்ய ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கின்றனர்.
You must be logged in to post a comment.