இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -2
கப்ளிசேட்
அப்பாஸிய பேரரசு-4
(கி.பி 750- 1258)
பாக்தாத் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அப்பாசியர்களின் கருப்புக்கொடிகள் நகரமெங்கும் அசைந்தாடின.
அருகிலுள்ள மாகாண மக்கள் எல்லாம் தலைநகரில் குவிந்திருந்தனர்.
புதிய மன்னர் நாளை பதவியேற்கப் போகிறார்.
அரண்மனை அடுப்புகள் எரிந்து கொண்டே இருந்தது. மக்களுக்கு பலவகையான உணவுகள் தயாராகிக்கொண்டு இருந்தன.
அதிகாலை சுபுஹு தொழுகை முடிந்ததும் அரண்மனையின் அந்த அழகிய மண்டபத்தில் அப்பாஸிய பரம்பரையின் ஐந்தாவது மன்னராக 25 வயதேயான ஹாரூன் அர்ரஷீத் பதவியேற்றார்.
அப்பாஸிய மன்னர்களின் மேலாடை அணிவிக்கப்பட்டு தலையில் கருப்புத் தலைபாகையோடு நாட்டு மக்களுக்கு சிறந்த ஆட்சியை வழங்குவதாக உறுதி கூறி பதவியேற்றார்.
பதவியேற்பு நாளன்று மன்னருக்கு மாஃமூன் என்ற அழகான ஆண்குழந்தை பிறந்தது.இது மன்னருக்கு இரட்டை மகிழ்ச்சியை அளித்தது.
ஆண்குழந்தை பிறந்ததால் அரண்மணையின் அந்தப்புறமும் வாழ்த்து சொல்ல வந்தவர்களால் நிரம்பி வழிந்தது.
அந்தப்புறத்தில் இனிப்புகள் செய்யப்பட்டு எல்லோருக்கும் வழங்கப்பட்டது. பிரசவம் பார்த்த பெண்ணுக்கு உயர்ந்த பரிசுகள் வழங்கப்பட்டது.
மன்னர் ஹாரூன் அர்ரஷீத் சிறிய வயதேயானாலும் மிகுந்த மதிநுட்பம் உடையவர். மிகச்சிறந்த நிர்வாகி. ஆகவே சிறந்த அமைச்சரவையை உருவாக்கினார்.
அமைச்சரவையில் கல்வியாளர்களும், கவிஞர்களும், ஆலிம்களும், சட்டக்கலை வல்லுநர்களும், பல துறையின் அறிஞர்களும் இருந்தனர்.
வயது முதிர்ந்த மூத்தவர்களும், சுறுசுறுப்பான இளைஞர்களும், கலந்து இருந்தனர்.
அறிவியல்,புதிய ஆராய்ச்சிகள், சட்டக்கலை, சமயக்கலை, சமூக கட்டமைப்பு, அரசியல் கலைகள் கல்வி ஆராய்ச்சி என மிகச்சிறப்பான கட்டமைப்புகள் அமைக்கப்பட்டன.
ஆட்சியில் மிகச்சிறந்த ஆலோசகராக மன்னரின் தாயார் கைசுரான் அவர்கள் இருந்தார்கள்.
மன்னரின் ஆசிரியர் யஹ்யா பின் காலித் அவர்கள் தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டார்கள்.
மன்னரின் மகன்களான பதுல், ஜாபர்,மூஸா ஆகியோர்கள் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டனர். ஆகவே மக்களின் குறைகள் கேட்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
பர்மக்கி குடும்பத்தினர் களோடு மன்னருக்கு நல்ல உறவு இருந்தது.
இதுபோன்ற நெருக்கமானவர்கள் மூலமாக ஆட்சி நிர்வாக கட்டமைப்புகளை சிறப்பாக மன்னர் ஏற்படுத்தினார்.
மன்னர் எல்லைப்புறங்களில் அதிகம் கவனம் செலுத்தினார்.
கலைகளை வளர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு ஒவ்வொரு துறையிலும் சிறந்த அறிஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு கலைகள் வளர்க்கப்பட்டன.
தனது அரண்மனையில் மன்னர் ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தபோது மன்னரை நோக்கி ஒரு அம்பு பறந்து வந்தது.
அது மன்னரின் மேலங்கியை உரசிச் சென்றது. அரசவையே திகைத்துப்போனது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
You must be logged in to post a comment.