அருப்புக்கோட்டையில், சுட்டரிக்கும் வெயிலில் செய்தி சேகரிக்க சென்ற சன் டிவி செய்தியாளர் உயிரிழப்பு: “கீழை நியூஸ்” மற்றும் “சத்திய பாதை” குழுமத்தின் ஆசிரியர் இரங்கல்.
இது சம்பந்தமாக கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை குழுமத்தின் ஆசிரியர் சையது ஆப்தீன் கீழ்கண்டவாறு இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை சன் டிவி செய்தியாளர் ராஜா சங்கர் இன்று மே 2 காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் சுட்டெரிக்கும் கடும் வெயிலில் சென்று செய்தி சேகரித்துவிட்டு உடல் சோர்வடைந்த நிலையில், மீண்டும் அருப்புக்கோட்டைக்கு வந்த உடனே உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்த சம்பவம் அறிந்து தாங்கா துயரம் அடைந்தோம்.
கடுமையான சவால்கள் நிறைந்த பணிபுரியும் செய்தியாளர்களுக்கு, ஊதியம் என்னவோ குறைவுதான்! சமூக அக்கறையோடு செய்திகளை தந்து கொண்டிருக்கிறார்கள் என்றாலும், புலி வாலைப் பிடித்த கதையாக கௌரவத்திற்காக இங்கே பத்திரிகை பணியில் பலர் உள்ளனர். ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் போது கிடைக்கும் ஊதியத்தை விட மிக குறைவான ஊதியம் பெறும் செய்தியாளர்கள் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியவர்கள்.
அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால், அவர்களது குடும்பம் அந்த கணமே நடுத்தெருவுக்கு வந்துவிடும் சூழல்தான் நிதர்சனம். எனவே, பணியின் போது உயிரிழந்த சன் டிவி செய்தியாளர் அவர்களின் குடும்பத்திற்கு, சன் டிவி நிறுவனம் உடனடியாக தகுந்த நிவாரணங்களை வழங்க வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு கருணை உள்ளத்தோடு நிதி உதவியும், வாய்ப்பிருப்பின் அவரது குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமெனவும் கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை குழுமத்தின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்..
You must be logged in to post a comment.