திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வரக்கூடிய 5 ம் தேதி, வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு தேடியும், மழை வேண்டியும் 3 இடங்களில் சிறப்பு தொழுகை..
தமிழ்நாட்டில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால், இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே அதாவது கடந்த 3 மாதங்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வெப்ப அலை வீசிக்கொண்டே இருக்கிறது. சென்ற ஆண்டுகளில் சில நாட்கள் மழை பெய்து வெப்பத்தை தணித்து இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மழை கடுகளவும் பெய்யாததால் வெப்பத்தின் தாக்கத்தில் பொதுமக்கள் நிலைகுலைந்து உள்ளனர். ரோட்டில் நடமாடவே முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் உமர் பாரூக் மழாஹிரி, செயலாளர் அபுதாஹிர் நூரானி, பொருளாளர் சபியுல்லாஹ் தாவூதி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையான வறட்சி காலங்கள் மற்றும் மழை இல்லாத நேரத்தில் ஒரு பெரிய திடலுக்குச் சென்று மழை வேண்டி சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். இதன் அடிப்படையில் திருப்பூர் உள்பட தமிழகம் எங்கும் மழையின்றி வெப்பம் தாங்க முடியாத அளவிற்கு அதிகரித்து வரும் இச்சூழலில் வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு தேடியும், அல்லாஹ்வின் கோபத்தை விட்டு பாவ மன்னிப்பு கேட்டு, மழை வேண்டி பிரார்த்திக்கும் விதமாக திருப்பூர் வட்டார ஜாமாஅத்துல் உலமா சபை சார்பில் வரும் 5 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு காங்கேயம் ரோடு, சி.டி.சி டெப்போ அருகில் உள்ள அல்-அமீன் பள்ளி வளாகம், அவிநாசி ரோடு, எஸ்.ஏ.பி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஜன்னத்துல் பக்கி கபர்ஸ்தான் பள்ளிவாசல், மங்கலம், எம்.எஸ்.ஜெ.எம் திருமண மஹால் ஆகிய 3 இடங்களில் மழை தொழுகை நடக்க உள்ளது. அதனால் முஸ்லீம் பெருமக்கள் மஹல்லா வாசிகள், மதரஸா மாணவர்கள், சிறுவர்கள் என அனைவரும் திரளாக கலந்துகொண்டு மழை தொழுகைக்கு வரவேண்டும். தொழுகைக்கு வரும் முன் நபிலான தான தர்மங்கள் செய்துவிட்டு வரவும். வீட்டிலேயே ஒழு செய்துவிட்டு தொழுகைக்கான விரிப்புகளை கொண்டு வரவேண்டும். தொழுகை முடிந்தவுடன் அழுது பிராத்தனை செய்யப்படவுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.