தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கை வரிசை காட்டிய திருட்டு கும்பல் நேற்று போலீசாரிடம் வசமாக மாட்டிக் கொண்டனர். இராமேஸ்வரம் ரயில்வே போலீசார் இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், இராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில் வரும் நேரங்கள் மட்டுமின்றி மதியம், இரவு வேளைகளில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாம்பன் ரயில் நிலையம் கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக இரவில் குடும்பமாக முகாமிட்டிருந்த கும்பல் மீது ரோந்து பணியின் போது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. கடந்த வாரத்தில் முதல் இரண்டு நாள் விசாரணையில் முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல் தெரிவித்தனர். உச்ச கட்ட சந்தேகத்திற்குச் சென்ற போலீசார் இது குறித்து போலீஸ் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனடிப்படையில் சென்னையைச் சேர்ந்த சிறப்பு காவல் படையினர் நேற்று காலை இராமேஸ்வரம் வந்தனர். இரயில்வே நிர்வாக அனுமதியின் பேரில் பாம்பன் ரயில் நிலையத்தில் தங்கி இருந்த கும்பலை சுற்றி வளைத்தனர். ஊர், ஊராக சென்று பழைய பாத்திரங்களுக்கு அலுமினியம் பூசுவது போல் நடித்து அங்கு தங்கியிருந்த 2 பெண்கள் உள்பட 10 பேரை கைது செய்தனர். சென்னை தரமணி, சீர்காழி உள்ளிட்ட இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என விசாரணையில் தெரிந்தது. கைது செய்யப்பட்ட 10 பேரையும் மேல் விசாரணைக்காக போலீசார் சென்னை அழைத்துச் சென்றனர்.
You must be logged in to post a comment.