வாகன சோதனையின்போது ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) வாகனப் பதிவு சான்றிதழ் உள்ளிட்டவற்றை மின்னணு (டிஜிட்டல்) முறையிலும் காண்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
தற்போதைய சூழலில், போக்குவரத்து போலீசாருக்கும், பிற காவல் அமைப்பினருக்கும் சாலைகளில் செல்லும் வாகனங்களை சோதனையிட உரிமை உண்டு. வாகனத்தின் காப்பீடு, பதிவு சான்று, ஓட்டுநர் உரிமங்கள் ஆகியவற்றை வாகன ஓட்டிகள் அவர்களிடம் காண்பிக்க வேண்டியது அவசியம். இதற்காக அந்த ஆவணங்கள் அனைத்தையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்தச் சூழலில், அந்த நடைமுறையை மாற்றி மின்னணு முறையில் அந்த ஆவணங்களைக் காண்பிக்கலாம் என மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவுறுத்தியது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
டிஜிலாக்கர்’, எம் – பரிவாஹன்’ உள்ளிட்ட செயலிகளில் அந்த ஆவணங்களை பதிவிறக்கம் செய்துகொண்டு, அதன் வாயிலாக அவற்றை காண்பிக்க அனுமதியளிக்கப்பட்டது. ஆனால், பல இடங்களில் போக்குவரத்து போலீசார் அதனை ஏற்றுக்கொள்வதில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் மத்திய அரசுக்கு வந்தன.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம், இதுகுறித்து சில அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது.
அதன் விவரம் வருமாறு:–
இருவேறு செயலிகளின் வாயிலாக ஆவணங்களை காண்பிக்கலாம் என்று ஏற்கெனவே அனுமதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல இடங்களில் அதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படவில்லை எனத் தெரிகிறது. அதன் விளைவாகவே மீண்டும் இந்த அறுவுறுத்தலை விடுக்க வேண்டிய சூழல் எழுந்திருக்கிறது.
டிஜிலாக்கர்’, எம்–பரிவாஹன்’ மூலமாக காண்பிக்கப்படும் ஆவணங்களை அசல் ஆவணங்களைப் போன்றே அதிகாரிகள் கருத வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.