பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் தேனியில் அதிரடி கைது! கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை! கோவை அழைத்து வரும்போது விபத்தில் சிக்கிய போலீஸ் வாகனம்..
யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சவுக்கு சங்கருக்கு என்று ரசிகர் பட்டாளேமே இருந்து வருகிறது. அரசியல் விமர்சகரான இவர் தொடர்ந்து ஆளுங்கட்சியான திமுகவை கடுமையாக தாக்கி பேசிவந்தார். கடந்த ஆண்டு நீதிபதியை விமர்சனம் செய்த காரணத்தால் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சுமார் 10 மாதத்திற்கு பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அப்படி இருந்த போதிலும் திமுக அரசின் செயல்பாடுகளையும், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை குறிவைத்து சவுக்கு சங்கர் தனது சவுக்கு ஊடகத்தின் மூலம் தினமும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அரசியல் ரீதியாக பேசும் சவுக்கு சங்கர் சில நேரங்களில் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
இந்நிலையில், காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கோவை அழைத்து வருகின்ற நிலையில் காவல்துறை வாகனம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளானது.காலில் லேசான காயம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மாற்று வாகனத்தில் கோவைக்கு அழைத்துச் சென்றனர்.