இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட கணிப்பாய்வு அலுவரும்,அரசு முதன்மைச் செயலர், தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு நிறுவனத் தலைவர், மேலாண் இயக்குநருமான டாக்டர்.பி.சந்திரமோகன் எதிர்வரும் கோடை காலத்தை கருத்தில் கொண்டு பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட ஏதுவாக புதிய குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தெரிவித்ததாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் கோடை காலத்தை கருத்தில் கொண்டு பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட ஏதுவாக புதிய குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்துவதற்கு உரிய சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.80 லட்சம் மதிப்பில் 10 புதிய பணிகளும், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.42 லட்சம் மதிப்பில் 3 புதிய பணிகளும் ஊராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.848 லட்சம் மதிப்பில் 175 புதிய பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இப்பணிகள் அனைத்தையும் முறையே பிப்ரவரி மாத இறுதிக்குள் நிர்வாக அனுமதி பெற்று கால தாமதமின்றி ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகளை நிறைவேற்றி மார்ச் மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் இன்றைய நிலவரப்படி 37 ஆடுனு அளவு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கோடைகால சூழ்நிலையில் இத்தண்ணீரின் அளவு சற்று குறையலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதனை ஈடு செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பைச் சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் விநியோக குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்திடவும்,முறைகேடான குடிநீர் இணைப்புகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தெருவிளக்கு வசதி,சாலை வசதி, குப்பை மற்றும் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கான திடக்கழிவு மேலாண் திட்ட செயல்பாடு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். அரசு முதன்மைச் செயலர், தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு நிறுவனத தலைவர், மேலாண் இயக்குநருமான டாக்டர்.பி.சந்திரமோகன், மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ் ஆகியோர் பரமக்குடி நகரம், சந்தைப்பேட்டை, பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் சூடியூர் கிராமத்திலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் விநியோக திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த.கெட்சி லீமா அமலினி, பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.ஆர்.சுசிலா, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.