இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. அவர் கூறியதாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் 2016-17 -ஆம் ஆண்டில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 1,20,846 விவசாயிகளுக்கு 1,01,288 எக்டேர் பரப்பில் நெல் மற்றும் இதர வேளாண் பயிர்களுக்கும் பயிர்காப்பீடு செய்யப்பட்டு காப்பீடு இழப்பீட்டுத் தொகையாக ரூ.528.90 கோடி சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 2017-18ம் ஆண்டில் 1,53,779 விவசாயிகள் மூலம் 1,23,493 எக்டேர் பரப்பில் நெல், இதர பயிர்களுக்கும் பயிர்காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இழப்பீட்டுத் தொகை பெறுவதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் நோக்கில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை காலதாமதமின்றி சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி சம்பந்தப்பட்ட வேளாண் பயிர்காப்பீட்டு நிறுவனத்திற்கு அரசு கடிதங்களின் வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2018-19ம் ஆண்டில் 2,37,522 விவசாயிகள் மூலம் 1,18,019 ஹ எக்டேர் பரப்பில் நெற்பயிருக்கும் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2016-17ம் ஆண்டில் விடுபட்ட 886 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க சிறப்பு முகாம்கள் மூலம் சரியான விவரங்கள் பெறப்பட்ட 480 விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் நலனுக்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்றார். பட்டு வளர்ச்சித் துறையின் சார்பில் 2017-18ம் ஆண்டில் பட்டு வளர்ப்பில் சிறப்பாக செயல்பட்ட விவசாயிகள் தங்கவேலுக்கு ரூ.25 ஆயிரம், எஸ்.பாண்டிக்கு ரூ.20 ஆயிரம், எ.முனியசாமிக்குரூ.15 ஆயிரத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வழங்கினார்.
வேளாண் துறை இணை இயக்குநர் (பொ) எல்.சொர்ணமாணிக்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எஸ்.எஸ்.ஷேக் அப்துல்லா உள்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.