தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குப்பையில்லா தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. சமூகப் பங்கேற்பு மூலம் துப்புரவு என்பது அனைவரின் தொழில் என்ற கருத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தன்னார்வ அடிப்படையில் இந்தியா முழுவதும் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தென்காசி மருத்துவமனை சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தும் சேவையை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை பணியாளர்களும், சகி ஒருங்கிணைந்த சேவை மையம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஆகியவை இணைந்து மருத்துவமனை வளாகத்தில் “ஸ்வச்சதா ஹி சேவா” தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு நாள் ஒரு மணி நேர தூய்மை பணிகள் அக்.1 காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை மேற்கொள்ளப்பட்டது.
அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. ஜெஸ்லின் தலைமையேற்று துவங்கி வைத்து ஸ்வச்சதா இ சேவா தூய்மை பணி குறித்து விவரித்துக் கூறினார். அனைவரும் நமது சுற்றுப்புறத்தையும் அரசு மற்றும் தனியார் சுற்றுப்புறங்களும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதையும் தூய்மையாக சுற்றுப்புறத்தை வைப்பதனால் நமது ஆரோக்கியத்திற்கு அது பலன் தரும் என்பதையும் விவரித்துக் கூறினார். இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி செயலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி ஜெயராணி தூய்மை இந்தியா உறுதிமொழியை முன் மொழிந்தார். தென்காசி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் தூய்மை இந்தியா உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், சகி ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள், பிளஸ்சன் செவிலியர் கல்லூரி மாணவிகள், மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் சுற்றுப் புறத்தூய்மையை மேம்படுத்தும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டன. தூய்மை இந்தியா பணியை சிறப்பாக நடத்திய மாணவிகளுக்கும், தென்காசி மருத்துவமனை தூய்மை பணியாளர்களுக்கும், தென்காசி மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.