திருவண்ணாமலை தரணி சர்க்கரை அலை நிர்வாகம், கரும்பு விவசாயிகளுக்கு வழங்காமல், ரூ.26 கோடி பாக்கி வைத்துள்ளது. அந்த பணத்தை, வரும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிக்குள் படிப்படியாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற பேச்சு வர்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் கரைப்பூண்டியில் உள்ள தரணி சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. கடந்த வருடம் அரைவைப் பருவத்திற்கான விவசாயிகளுக்குத் தரவேண்டிய 26 கோடி ரூபாய் பணத்தைத் தரக்கோரியும், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத அரசைக் கண்டித்தும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் தலைமையில், போளூர் தரணி சர்க்கரை ஆலை முன்பு கடந்த 24 ஆம் தேதி முதல் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து கடந்த செவ்வாய் அன்று கோட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், ஆலை நிர்வாகத்தினர் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் நிலுவைத்தொகையினை மார்ச் 31ஆம் தேதிக்குள் அளிப்பதாகத் தெரிவித்தனர். ஆனால் விவசாயிகளோ மார்ச் 31ஆம் தேதியிட்ட காசோலையினை தருமாறு வற்புறுத்தினர். ஆலை நிர்வாகமோ பணமாகத்தான் தருவோம் என்றும் காசோலையாகத் தரமாட்டோம் எனவும் உறுதியாக தெரிவித்தது. இதனால் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடப்போவதாக நடைபயணமாக திருவண்ணாமலை நோக்கிப் புறப்பட்டனர். அவர்கள் கரைப்பூண்டி பாலம் அருகே செல்லும்போது காவல் துறையினரால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து கடந்த புதன் அன்று, (பிப்-26) மாலை 3 மணிக்கு, கரும்பு விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். இரவு 9 மணி வரை காத்திருந்தும், ஆட்சியர் வராததால் கோரிக்கை மனு அளிக்க முடியவில்லை. போலீசார் விவசாயிகளை திருவண்ணாமலை காந்தி சிலை அருகிலுள்ள ஒரு திருமண மண்பத்தில் தங்க வைத்தனர்.
இந்நிலையில் வியாழன் அன்று காலை, விவசாயிகள் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அப்போது, மாவட்ட ஆட்சியர், விவசாயிகளையும், ஆலை நிர்வாகிகளையும் அழைத்து பேச்சு நடத்தினார்.
பேச்சுவார்த்தை முடிந்தபின் விவசாயிகளிடம் பேசிய டி.ரவீந்திரன் கூறியபோது,
கரும்பு விவசாயிகளுக்கு அலை நிர்வாகம் வழங்க வேண்டிய பாக்கி பணத்தை வரும் பிப் 15 முதல் 31 ஆம் தேதிக்குள் வழங்கிவிடுவதாக ஆலை நிர்வாகிகள் உறுதியளித்துள்ளனர் என்று கூறினார்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
You must be logged in to post a comment.