ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு ஆதரவாக விழிப்புணர்வு கூட்டம்! ஆவேசத்துடன் தடுத்து நிறுத்திய விவசாய சங்க தலைவர் பி.ஆர் பாண்டியன்..
திருவாரூர் மாவட்டத்தில், அரசு சார்பில் ஓஎன்ஜிசிக்கு ஆதரவான விழிப்புணர்வு கூட்டம் நடைபெறுவது குறித்து தகவல் அறிந்து, அங்கு வந்த விவசாய சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன், அங்கிருந்த அரசு அதிகாரியிடம் ஆவேசமாக வாக்குவாதம் செய்து, கருத்து கேட்பு கூட்டத்தை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ள விளைநிலங்களில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில், அதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து விவசாய சங்க தலைவர் பி.ஆர் பாண்டியன் கூறும் போது திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூர், பெரியகுடி ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணி துவங்கி விட்டதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.
ஏற்கனவே காவிரி டெல்டாவில் தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக தோண்டப்படும் கிணறுகளை தடுத்து நிறுத்தி வெளியேற்ற வேண்டும் என்று 2019ஜூலை 19 அன்று கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு காத்திருப்பில் உள்ளோம்.
இந்த நிலையில், நெல் அதிகம் விளையும் காவிரிப் பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக தமிழக அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து, காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட தொழிற்சாலைகள் தொடங்க தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவையில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட முன்வடிவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 20ம் தேதி தாக்கல் செய்தார். இந்த சட்டத்துக்கு தமிழக கவர்னர் கடந்த சனிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
இந்த நிலையில், தமிழக அரசின் சட்டத்திற்கு புறம்பாக ஹைட்ரோகார்பன் எடுக்கும் ONGC க்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூர், பெரியகுடி ஆர்டிஓ. (RDO) அங்குள்ள பொதுமக்களிடம் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினார். இது குறித்து தகவல் அறிந்த விவசாய சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன், அங்கு வந்து, விழிப்புணர்வு கூட்டம் நடத்தி வந்த ஆர்டிஓ உள்பட அரசு அதிகாரிகள், ஓஎன்ஜிசி அதிகாரிகளிடம் ஆவேசமாக வாக்குவாதம் செய்தார். அப்போது அவருடன் மாவட்ட செயலாளர் சு.செந்தில்குமார், நகர தலைவர் தங்கமணி, மன்னை ஒன்றிய தலைவர் எம்.மனோகரன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். இதையடுத்து விழிப்புணர்வு கூட்டம் நிறுத்தப்பட்டது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.