கீழக்கரை நகராட்சி.. வரி வசூல் செய்வதை தவிர வேறு எந்த பணியிலும் தீவிரம் காட்டாத நகராட்சி.. சில வருடங்களில் பல ஆணையரை பார்த்த நகராட்சி என பெருமையுடையது. வரும் ஆணையர்கள் எல்லாம் அரசியல்வாதிகள் பல வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு சில மாத, வருடங்களிலேயே மறைந்து விடுவார்கள், ஆகையால் நிரந்தர ஆணையர் இல்லாமல் பொறுப்பு அதிகாரிகளை வைத்தே அதிக காலம் செயல்புரியும் நகராட்சி என்றும் பட்டம் கொடுக்கலாம். இறப்பு, பிறப்பு போன்ற சான்றிதழ்கள் பெறவும், அதை சரிபார்க்கவும் பக்கத்து ஊர் அதிகாரிகளை நம்பி இருக்கும் சூழல் என தனக்கே பல சிறப்பம்சங்களை கொண்டது கீழக்கரை நகராட்சி.
இது ஒரு புறம் இருக்க கழிவுநீர் மற்றும் பழைதடைந்த சாலைகள் என்பது என்றுமே தீர்க்கப்படாத, நகராட்சியால் தீர்வு காண முற்படாத பிரச்சினை என்றே கூறலாம், அந்த அளவுக்கு வழிந்தோடும் சாக்கடையும், குண்டும் குழயுமான சாலைகள். உதாரணத்திற்கு கீழக்கரை புதிய பேருந்து நிலையம் பின்புறம் கிழக்கு நாடார் தெரு செல்லும் சாலையில் வழியாகத்தான் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் மீன், காய்கறி மார்க்கெட் செல்லும் பொதுமக்கள், வாகனமும் அதிகம் செல்லும் சாலை.
இப்பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேல் கால்வாய் மூடி உடைந்து இரும்புக் கம்பிகள் நீட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வண்ணம் உள்ளது. இதனால் அவ்வழியில் செல்லும் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள். மிகவும் முக்கியமான சாலையின் நிலையே இப்படி என்றால், பிற பகுதிகள் எப்படி இருக்கும் என்பதை நாமே ஊகித்துக் கொள்ளலாம். எப்பொழுது நகராட்சி நிர்வாகம் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கீழக்கரையிலிருந்து செய்தியாளர்:- எஸ்.கே.வி.சுஹைபு
You must be logged in to post a comment.