கம்பம் அருகே வெளுத்துக் கட்டிய மழை, இடி தாக்கியதில் மூன்று மாடுகள் பலி; விவசாயி வேதனை..!
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று(28/05/2020) இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக கம்பம், கூடலூர் பகுதிகளில் நேற்று மாலை முதல் இடியுடன் கூடிய பலத்த மழை வெளுத்துக் கட்டியது.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு மழை பெய்ததாலும், அக்னி நட்சத்திரம் நிறைவடைந்ததாலும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
இந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கா வண்ணம் இடி விழுந்ததில் மூன்று மாடுகள் பலியான சம்பவம் கம்பம் பகுதி விவசாயிகளை கவலை அடையச் செய்தது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி தெற்குத்தெரு தண்ணீர்ப்பாறை என்னும் பகுதியை சேர்ந்தவர் விவசாயி வீரணன். இவரது மகன் முருகன்.
முருகன் தனது தோட்டத்தில் பண்ணை அமைத்து மாடுகள் வளர்த்து வருகிறார்.
நாட்டுப்பசு உட்பட 5 மாடுகளை வளர்த்து வந்தார்.
இந்நிலையில் அப்பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
அப்போது இடி விழுந்தததில் ஒரு நாட்டுப்பசு மற்றும் மற்றொரு பசு , ஒரு கன்று ஆகிய மூன்றும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
உயிரிழந்த பசு மற்றும் நாட்டுப்பசு ஆகிய இரண்டும் சினையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மூன்று மாடுகள் இறந்து கிடந்ததை பார்த்த முருகன் உட்பட அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். உயிரிழந்த மாடுகளின் மதிப்பு இரண்டு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
உயிரிழந்த மாடுகள் கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகரன் மற்றும் கால்நடை மருத்துவர் செல்வம் முன்னிலையில் அப்பகுதி யிலேயே புதைக்கப்பட்டது.
பல மாதங்களுக்குப் பின் மழை பெய்த நிலையில் அந்த மழையின் மகிழ்ச்சியை சிறிது நேரம் கூட அனுபவிக்க முடியாமல் மூன்று மாடுகள் இடிதாக்கி பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதி விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியது.
A.சாதிக்பாட்சா,நிருபர் தேனி மாவட்டம்
You must be logged in to post a comment.