விவசாயத்தை அழிக்கும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும்:- ஈ ஆர் ஈஸ்வரன் கோரிக்கை..
இது சம்பந்தமாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ ஆர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கொரோனா தமிழ்நாட்டுக்கு வராது என்று சொன்னது போல வெட்டுக்கிளிகள் தமிழ்நாட்டுக்கு வராது என்று தமிழக அரசு சொல்வது கவனக்குறைவை காட்டுகிறது.
வெளிநாடுகளிலே அழிவை ஏற்படுத்துகின்ற வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து வடமாநிலங்களை சின்னாபின்னப்படுத்திக் கொண்டிருக்கிறது. பல கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் ஒன்று சேர்ந்து விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சாப்பிட்டே அழிக்கிறது. பாதிக்கப்பட்ட குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போய் இருக்கிறார்கள். கொரோனா பரவலில் இருந்து இந்தியா மீளாத நிலையில் வெட்டுக்கிளிகளுடைய தாக்கம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு மாநில மாவட்ட எல்லைகளை மூடியது போல தடுப்புகளை போட்டு வெட்டுக்கிளி பரவலை தடுக்க முடியாது. ஒரே நாளில் 200 கிலோமீட்டர் பயணம் செய்யக்கூடிய தன்மை வாய்ந்த வெட்டுக்கிளிகள் எவ்வளவு விரைவில் தமிழகம் வந்து சேர்ந்துவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். திறமைவாய்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய குழுவை போட்டும், வெளிநாடுகளில் வெட்டுக்கிளி பிரச்சினைக்கு எப்படி தீர்வு கண்டார்கள் என்பதை கேட்டறிந்தும் தீர்க்கமான திட்டங்களோடு இந்த அபாயத்திலிருந்து தமிழகத்தை காப்பாற்ற அரசு உடனடியாக அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும். அதேசமயம் வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற தேவைப்படுகின்ற நிதியை தாமதப்படுத்தாமல் விவசாயிகளுக்கு அரசு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
You must be logged in to post a comment.