இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி காமராஜர்புரம் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து. தீயை அணைக்கும் பணியில் 2 தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீரர்கள் போராடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி காமராஜர்புரம் குடியிருப்பு பகுதியில் தளவாய்புரத்தைச் சேர்ந்த ஐயர்சிகாமணி என்பவர் பழைய பிளாஸ்டிக் குடோன் வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இன்று திடீரென அப்பகுதியில் குப்பையில் தீப் பிடித்ததை அடுத்து அருகிலிருந்த குடோனிலும் மளமளவென பரவி தீ பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த தீ குடோன் முழுவதும் எரிந்து கரும்புகை சூழ்ந்ததால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மூச்சு விட முடியாமல் திணறி வருகின்றனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த இராஜபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராமன் தலைமையில் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரத்துக்கு மேலாக தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இந்த தீ விபத்து குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மின்கசிவா? அல்லது முன் விரோதத்தால் யாரும் தீவைத்தனரா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
மேலும் கரும்புகை சூழ்ந்ததால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
செய்தியாளர்,வி. காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.