மாவட்ட செய்திகள்
“கிடாவை கண்டுபிடித்து கொடுத்தால் உடல் உறுப்பு தானமாக வழங்கப்படும்..!”வினோத சுவரொட்டி..
கோயிலுக்கு நேர்ந்துவிட்ட கிடாவை காணவில்லை; அதைக் கண்டுபிடித்து தருவோருக்கு, உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்படும்’ என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரை, பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
இதுகுறித்த விவரம் வருமாறு; காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, திருப்போரூர், சிங்கப் பெருமாள் கோவில் போன்ற பகுதிகளின் பஸ் நிலையம் மற்றும் முக்கியமான பகுதிகளில், ‘காணவில்லை’ எனும் தலைப்பில், ‘நான் பெற்றெடுக்காத பிள்ளை கே.எம்.ராமு’ என்ற வாசகத்துடன், ஆட்டுக்கிடா படம் அச்சிட்ட ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரைத்தான் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
அதுசரி, அந்த போஸ்டரில் அப்படி என்னதான் உள்ளது..? காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகேயுள்ள சிங்கப்பெருமாள் கோவில், முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கே.முருகன் (எ) கணக்கு. இவர், கடந்த பல ஆண்டுகளாக கிடா ஒன்றை மிகவும் பாசமாக வளர்த்து வந்தார். ராமு என பெயர் கொண்ட அந்த கிடாவும் இவருடன் மிகவும் பாசமாக பழகி வந்ததுடன், இவருடனே படுத்து உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த கிடா காணாமல்போனது. இதனால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த முருகன், இதுகுறித்து மறைமலைநகர் போலீஸில் புகார் செய்தார். போலீஸாரோ, ’காணாமல் போன மனிதர்களையே கண்டுபிடிக்க முடியாமல் திண்டாடுகிறோம்; இதில், உனது கிடாவை எங்கிருந்து கண்டுபிடிப்பது..? போ… போய் நல்லா தேடிப்பாரு..!’ என்று அன்பாகச் சொல்லி அனுப்பி வைத்தனர்.
இதனால் மேலும் வேதனையடைந்த முருகன், போஸ்டர் அடித்து தானே அந்தக் கிடாவை கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்கினார். இதையடுத்து, தனது செல்போன் எண்கள் மற்றும் காணாமல்போன கிடாவின் படத்தை போஸ்டராக அச்சடித்து, அதை மாவட்டம் முழுவதும் ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில் உள்ள வாசகம்தான் பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதில், ‘படத்தில் உள்ள கே.எம்.ராமு பத்து ஆண்டுகளாக முத்துமாரியம்மன் கோயிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட கடா. இவன் காணாமல் போனதில் இருந்து எனது உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போய்க்கொண்டுள்ளது. என் மகனைப்பற்றி தகவல் தந்தாலோ, கண்டுபிடித்து தந்தாலோ 25 ஆயிரம் ரூபாய் சன்மானமாக வழங்கி, எனது உடலில் உள்ள எந்த பாகத்தை தானமாக கேட்டாலும் சத்தியமாக தருகிறேன்’ என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
‘மனிதர்கள் மாயமானால், விளம்பரம் கொடுத்து கண்டுபிடித்து தாருங்கள் எனக் கேட்பது வழக்கம். ஆனால் இவரோ, கிடாவை காணவில்லை, கண்டுபிடித்து தந்தால் 25 ஆயிரம் ரூபாய் சன்மானத்துடன் உடல் உறுப்பையும் தானமாக தருகிறேன் என்கிறாரே… அப்படியானால், அந்த கிடாவை எவ்வளவு பாசத்துடன் வளர்த்திருப்பார்’ என ஒருவருக்கொருவர் பேசியபடி சென்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் அபாயகரமான அங்கன்வாடி மையம் ஆபத்தில் பச்சிளம் குழந்தைகள்…
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைத் தாலுகா அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் பெருமாள் கோவில் தெருவில் மிகவும் ஆபத்தான அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இந்த அங்கன்வாடி மையமானது தமிழக அரசு அங்கன்வாடி திட்டம் கொண்டு வரப்பட்ட 1975-76 ஆண்டுகளில் கட்டப்பட்ட மிகவும் பழைமையான அங்கன்வாடி மையமாகும், இது சுண்ணாம்பு சுவராக கட்டபட்டு ஆஸ்பட்டாஸ் கூரை போடப்பட்டுள்ளது.
இந்த அங்கன்வாடி மையத்தில் பெருமாள் கோவில்த்தெரு, காளியம்மன் கோவில் த்தெரு, மேற்குத்தெரு,கடைவீதி, சந்தூர், கிழக்குத் தோட்டம் போன்ற பகுதிகளிலிருந்து 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2013-க்கு பின் ஐந்தாண்டுகளுக்கு மேலாக பராமறிப்பு இன்றி பழைய கட்டிடம் மற்றும் ஆஸ்பட்டாஸ் சீட்டுகள் உடைந்து, ஓட்டை விழுந்து, சுவர்கள் பொரிந்து மழையினால் மழைநீர் ஒழுகி ஊரிப்போய் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
மேலும் இந்த அங்கன்வாடி மையத்தில் சமயல்கூடமும், பொருட்கள் வைக்கும் அறையும் கான்க்ரீட் சுவரால் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் பெயர்ந்து போய் காண்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் வண்ணம் ஆபத்தான நிலையில் உள்ளது. பொருட்கள் சேமிக்கும் அறையில் வெளியிலிருந்து பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் உள்ளே வரும்படி பொந்துகளும் உள்ளன.
மேலும் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகள் பயன்படுத்தும் கழிவறை, சுகாதாரம் என்பதே சுத்தமாக இல்லாமல் பாசானம் பிடித்து வழுக்கி விழும் நிலையிலும், சுற்றுச்சுவர் பெயர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பெரும்பாலான பெற்றோர்கள் பாதுகாப்பு கருதி தங்கள் குழந்தைகளை இந்த அங்கன்வாடிக்கு அனுப்புவதை நிறுத்தி வருகின்றனர்.
எனவே மிகவும் பழமையான சிறு கோடை மழைக்கே தாங்காத இந்த அங்கன்வாடி மையத்தை மிகப் பெரிய விபத்து ஏற்படும் முன் உடனடியாக இந்த கோடை விடுமுறையைப் பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் மராமத்து செய்தோ அல்லது இந்த பழைய சுவரை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி மையம் அமைத்து தர வேண்டும் என்பது இப்பகுதி தாய்மார்கள் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
5 அடி பள்ளத்தில் இறங்கி சார்ஆட்சியர் வாகனம்….உயிர் தப்பிய சார்ஆட்சியர்..
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சார்-ஆட்சியர் ஆகாஷ் சென்ற வாகனம் மீது அரசுப்பேருந்து மோதியதில் சார்-ஆட்சியர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். சேரன்மகாதேவி சார்ஆட்சியர் ஆகாஷ் ஞாயிற்றுக்கிழமை அன்று ஜீப்பில் பாளையங்கோட்டைக்கு சென்றுள்ளார்.
மேலச்செவல் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது முன்னால் சென்ற பேருந்தை ஜீப் முந்திச் சென்றதாகவும், அப்போது சாலையின் குறுக்கே ஒருவர் வந்ததால் ஜீப் ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அரசுப் பேருந்து சார்ஆட்சியரின் ஜீப் மீது உரசியதில் ஜீப் நிலை தடுமாறி சாலையிலிருந்து சுமார் 5 அடி பள்ளத்தில் இறங்கியதாக கூறப்படுகிறது.
இதில் சார்ஆட்சியர் எந்த வித காயமுமின்றி உயிர் தப்பியதோடு இந்த சம்பவத்தை அடுத்து ஜீப்பை மீண்டும் சாலைக்குக் கொண்டு வந்து சார்- ஆட்சியர் அதே ஜீப்பில் பாளையங்கோட்டை சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காட்பாடியில் டூவிலர் மோதி நெட் சென்டர் உரிமையாளர் பலி.. உடல் உறுப்பு தானம்..
வேலூர் மாவட்டம் பழைய காட்பாடியை சேர்ந்த கணேசனின் மகன் கருணாநிதி (42) நேற்று முன்தினம் வீட்டிலிருந்து சாலையை கடந்த போது வேகமாக வந்த டூவிலர் கருணாநிதி மீது மோதியது. படுகாயம் அடைந்த அவரை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு தீவிர சிகிச்சைக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.
கருணாநிதியின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
கே எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள ஸ்ரீ Uக்த ஆஞ்சநேயர் கோவிலில் அட்சய திதியை முன்னிட்டு விசேஷ பூஜை நடைபெற்றது.
அட்சய திதியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு பால், தயிர், பன்னீர் சந்தனம் ஆதியவற்றால் அபிஷேகம் நடந்தது. பின்பு விஷேச பூஜை நடந்தது.பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. ஏற்பாட்டை கோவில்பட்டாச்சாரியர் கண்ணன் செய்து இருந்தார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பூக்கடைபஜாரில் உள்ள ஆர்த்தி மற்றும் எல்.எஸ்.கே.நகை கடைகளில் நேற்று இரவு முதல் இன்று 7-ம் தேதி காலை வரை சுமார் 10 பேர் கொண்டவருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகின்றது. இதனால் வாணியம்பாடி பூக்கடைபஜாரில் பரபரப்பு ஏற்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை பைபாஸ் சாலையில் எரிக்கப்படும் குப்பைகளால் ஏற்படும் பெரும் சுகாதார கேடு..
மதுரை பைபாஸ் சாலையில் தனியார் குடியிருப்பு உள்ள குப்பைத் தொட்டிகளில் மாநகராட்சி ஊழியர்கள் பாதி குப்பையை எடுத்துவிட்டு மீதி குப்பையை எரித்து விட்டு செல்கிறார்கள். இதனால் புகைமண்டலம் ஆகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மாசுபடுவதுடன் பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.
அப்பகுதி மக்கள் நகராட்சி ஊழியர்களை விசாரித்த பொழுது வாகனத்தில் இடமில்லை என்ற பொறுப்பில்லாத பதிலே கிடைக்கிறது. மேலும் அடுத்த முறை வந்து எடுத்துச் செல்ல வேண்டியது தானே என்று கேட்டதற்கு அவ்வாறு கொண்டு செல்ல அனுமதியில்லை என முன்னுக்கு பின் முரணாக பதில் தருகிறார்கள். ஆணையரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என கூறியவுடன், உடனடியாக சென்று தீயை அணைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
மேலும் மாநகராட்சி ஊழியர்களுக்கு முறையான வாகனம் மற்றும் உபகரணங்களும் வழங்கப்படாததும் இதுபோன்ற காரியங்களில் அவர்கள் ஈடுபட காரமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. அது போல விவசாய பயன்பாட்டில் உள்ள டிராக்டர்களும் குப்பை அள்ள பயன்படுத்தபடுகிறது என்பது கூடுதல் தகவலாகும். இதற்கு மதுரை மாநகராட்சி நிர்வாகம் நிரந்த தீர்வு காண வேண்டும்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தொடர்ந்து பத்திரிக்கையாளர் மீது கட்டவிழ்த்து விடப்படும் அராஜகம்… WJUT உட்பட பல்வேறு சங்கங்கள் கண்டனம்…
இன்று (06/05/2019) மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக தமிழக முதல்வர் வந்திருந்தார். முதல்வர் பிரசார காட்சியை செய்தி எடுக்க சென்ற நியூஸ் 18 ஒளிப்பதிவாளர் ராம்குமார், மற்றும் செய்தியாளர் ஸ்டாலின் ஆகியோரை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்தும் ஒருமையில் பேசியும் அராஜக போக்குடன் கீரைத்துறை ஆய்வாளர் டேவிட் ரவி ராஜன் நடந்துள்ளார்.
நெல்லையில் இப்படி தான் செய்தியாளர்களை கதற வைத்தேன். 4 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள், என்னை ஒன்று புடுங்க முடியவில்லை. இப்ப மட்டும் புடுங்க போறீங்களா?. என தொடர்ந்து மிரட்டியும் உள்ளார். இருவரையும் கைது செய்துள்ளதாகவும், ஜீப்பில் ஏறும்படியும் கூறியுள்ளார். செய்தியாளர்கள் மறுக்கவே. நீங்க போங்க பின்னாடியே எப்ஐஆர் போட்டுட்டு வீட்டுக்கு வர்றேன் என மிரட்டியுள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்கள் நடந்து வருவது ஒரு பக்கம் வேதனை அளிக்கிறது என்றால். மறுபக்கம் பாதுகாப்பு தரக்கூடிய காவல்துறையே இப்படி நடந்து கொள்வது தமிழக அரசுக்கு தலை குனிவு தான். இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறும் பட்சத்தில் நிச்சயமாக எதிர்ப்புகளை அரசின் முன் எடுத்து வைக்கப்படும் என பத்திரிக்கை சங்கங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக WJUT (WORKING JOURNALIST UNION OF TAMIL NADU) “தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்” மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ் மற்றும் மாநில பொதுச் செயலாளர் ஆர். சந்திரிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நமது சங்கத்தின் சார்பாக தமிழ் நாடு காவல்துறை இயக்குனர் அவர்களிடம். ஆய்வாளர் டேவிட் ரவிராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கவுள்ளோம். தமிழக அரசே போராட தூண்டாதே ஆய்வாளர் மீது நடவடிக்கை எடு என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… 22 பேர் படுகாயம்…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 30 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா செல்வதற்கு ராஜபாளையத்திலிருந்து சுற்றுலா பேருந்து மூலம் புறப்பட்டு மேட்டுப்பாளையம் வந்தனர். மறுநாள் காலை புறப்பட்டு ஊட்டி சென்று சுற்றி பார்த்துவிட்டு மதியம் 2.30 மணிக்கு ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக சொந்த ஊர் புறப்பட்டனர்,பேருந்தினை ராஜபாளையத்தை சேர்ந்த முத்துராஜ்(44) என்பவர் ஒட்டி வந்தார். மாலை 4.30 மணிக்கு மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு 2 வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்த போது ஓட்டுநர் முத்துராஜின் கட்டுபாட்டை இழந்த வாகனம் 30 அடி பள்ளத்தில் விழுந்தது.
இந்த சம்பவம் குறித்து அந்த சாலை வழியே சென்றவர்கள் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற மேட்டுப்பாளையம் காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இவ்விபத்தின் போது பேருந்தில் பயணித்த ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என 22பேர் காயமடைந்தனர். மேலும் படுகாயமடைந்து மோசமான நிலையில் இருந்த 5பேர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
படுகாயம் அடைந்த முத்தம்மாள், சித்ராதேவி, ராஜவேல், மகாலிங்கம், சங்கரேஸ்வரி, வெள்ளதுரைச்சி முத்து ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகர் கே.புதூர், சங்கர் நகர் 1வது தெருவை சேர்ந்த பாண்டி என்பவருடைய மகன் ஜெயக்குமார் 28/19 என்பவர் மதுரை மாநகரில் கஞ்சாவை விற்பனை தொழில் செய்து வந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. உத்தரவுப்படி இன்று (06.05.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்
.செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து, ஐராவதநல்லூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ, இராஜன் செல்லப்பா எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், வக்கீல் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் அருகே வனக்காவலர் மற்றும் அவருடைய மனைவி கொலை கும்பலால் தாக்கப்பட்ட சம்பவத்தில் வனக்காவலர் பலி…
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பள்ளபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் அவரது மனைவி சுந்தரவல்லி ராஜேந்திரன் தமிழக வனத்துறையில் வன காவலராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அவரும் அவரது மனைவியும் பள்ளபட்டி சிப்காட் பகுதியில் உள்ள அவர்களது தோட்டத்திற்கு சென்று உள்ளனர். இந்நிலையில் 8 பேர் கொண்ட கும்பல் அவரது தோட்டத்தின் அருகே மது அருந்தியுள்ளனர். அதனை தட்டிகேட்ட வன காவலர் ராஜேந்திரன் அவரது மனைவியையும் பீர் பாட்டில் மற்றும் கற்கலால் குத்தியுள்ளனர். இதில் வனக்காவலர் ராஜேந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பலியானார். அவரது மனைவி பலத்த காயத்துடன் நிலக்கோட்டை அரசு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அம்மையநாயக்கனூர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும்-TARATDAC வடமதுரை நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்…
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வடமதுரை ஒன்றிய கிளை நிர்வாகிகள் கூட்டம் 05.05.19 அன்று மாலை 05.00 மணியளவில் சித்துவார்பட்டியில் உள்ள காஜா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சங்கத்தின் வடமதுரை ஒன்றிய தலைவர் சிவா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பகத்சிங், வடமதுரை ஒன்றிய செயலாளர் கருப்பையா, மாவட்டக்குழு உறுப்பினர் பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முப்பதுக்கும் மேற்பட்ட கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூபாய் ஆயிரம் வழங்கி வருகிறது. இவ்வாறு தமிழக அரசு வழங்கும் உதவித்தொகை கிடைக்காமல் வடமதுரை ஒன்றியத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மனு செய்து ஆண்டுக்கணக்கில் காத்திருக்கின்றனர்.
இவ்வாறு மனு செய்து காத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்தவுடன் போர்க்கால அடிப்படையில் உடனடியாக உதவித்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ் சினிமாவில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் – இயக்குநர்களுடன் கலந்துரையாடல்..
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக ஊடகத்துரை சார்பாக 2019 மே 4 ஆம் நாள் சென்னை கவிக்கோ மன்றத்தில் ‘தமிழ் சினிமாவில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள்’ நிகழ்வு நடந்து முடிந்தது.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஸலாஹுதீன் வரவேற்றுப் பேசினார். மாநிலத் தலைவர் ஷப்பீர் அஹமத் அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்தினார்கள். இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், மீரா கதிரவன், லெனின் பாரதி, தாமிரா, கோபி நைனார், ராஜு முருகன், மாரி செல்வராஜ், அனீஸ் ஆகியோர் மனம்திறந்த விரிவான கருத்துரைகளை வழங்கினர். கவிஞர் மனுஷ்ய புத்திரன் தொகுப்புரை நிகழ்த்தினார். கவிஞர் யுகபாரதி நிறைவுரை வழங்கினார். இந்த நிகழ்வை மாநில ஊடகச் செயலாளர் வி.எஸ். முஹம்மத் அமீன் தொகுத்து வழங்கினார்.
இருபதுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி, வலைதள தொலைக்காட்சிகள் இந்த நிகழ்வைப் பதிவு செய்து பலதளங்களில் செய்திகளைக் கொண்டு சேர்த்தன. ஒரே நாளில் இலட்சக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வைப் பார்த்ததுடன், பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முஸ்லிம்கள் வாழ்வியல் குறித்த வாத விவாதங்களை திரையுலகிலும், முஸ்லிம் சமூகத்திலும் இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமேஸ்வரம் தங்கச்சிமடம் ஜான்சன் என்பவரது விசைப்படகில் விஜி, பரதன், சேவியர், ராஜா ஆகியோர் 1996 மே 4ல் கடலுக்குச் சென்றனர். மே 5ல் கரை திரும்ப வேண்டிய படகு கரை திரும்பவில்லை. விசாரணையில், படகு கடலில் மூழ்கியதில் பரதன் உள்பட 4 பேரை தேடி வருவதாக தகவல் தெரிவித்தனர்.
மாயமான மீனவர்களை பல நாட்களாக தேடிய நிலையில் மாயமானவர்கள் பட்டியலில் பரதன் உள்பட 4 பேரும் சேர்க்கப்பட்டனர். அவர்களது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு மீன்வளத்துறை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஏப்.9 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யூடியூப் சானலில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக என தகவல் வெளியானது. அதில் தனது தந்தை பரதன் பிச்சை எடுக்கும் கும்பலுடன் பரிதாபமான நிலையில் சேர்ந்து வாழ்ந்து வருகிறார் என்பதை பரதன் குடும்பத்தினர் உறுதி செய்தனர்.
இந்நிலையில் பரதன் குடும்பத்தினரை சந்தித்து மீன்வளத்துறை அதிகாரிகள் பரதன் மாயமானது குறித்து எழுத்து பூர்வ மனு பெற்று கொண்டனர். 23 ஆண்டுகளுக்கு முன் மாயமான மீனவர் பரதனை இலங்கையில் இருந்து மீட்டு ஒப்படைக்க வேண்டும். பரதன் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் நிவாரண நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரதன் மகள் சரவண சுந்தரி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் சோதனை முறையில் போக்குவரத்து ஆய்வாளர்களின் நடவடிக்கைகளை நேரடியாக கண்காணிக்கும் வகையில் சட்டை பையில் கேமரா..
மதுரை மாநகர போக்குவரத்து ஆய்வாளர்களுக்கு வாகன தணிக்கையின் போது அவர்களின் நடவடிக்கைகளை நேரடியாக கண்காணிக்கும் வகையில் அணிந்திருக்கும் சட்டை மேலே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
தற்சமயம் சோதனை முறையில் மதுரை திருப்பரங்குன்றம் துணை ஆய்வாளர்களுக்கு இந்த கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனால் காவல்துறைக்கும் பொது மக்களுக்கும் இடையில் என்ன நடக்கிறது என ஆணையாளர் நேரடியாக கண்காணிக்க முடியும. இதனால் வாகன தணிக்கையின் போது பொது மக்களுக்கும், போக்குவரத்து காவல் துறைக்கும் ஏற்படும் சச்சரவை கட்டுக்குள் கொண்டு வர்முடியும்.
தற்சமயம் சோதனை ஓட்டமாக இந்த கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது, வருங்காலங்களில் அனைத்து மாவட்டங்களில் செயல்படுத்தபடும் என அறியப்படுகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பிரதமர் மோடியா? ராகுலா? என்ற விவாதம் எழுவதற்கு காரணமே ஸ்டாலின்தான் – துரைமுருகன்!
மோடியா ராகுலா என்ற விவாதம் எழுவதற்கு முழு காரணம் ஸ்டாலின் தான் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்பிக் நகர் பகுதியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
அப்போது பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் கனிமொழி பிறந்த 7 வது நாள் அவரை நான் கையிலேந்தி செல்லகுழந்தையாக வளர்த்தவன். முதல் முறை தேர்தலில் போட்டியிடும் கனிமொழியின் பிரச்சரத்தை துவக்கி வைத்திருக்கவேண்டும். ஆனால் சூழல் மாறிவிட்டது. கண்டிப்பாக தூத்துக்குடி வெற்றி விழாவில் பங்கேற்பேன். எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் கருணாநிதிக்கு பின்னால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுகொண்ட இயக்கம் திமுக மட்டும் தான்.
முதல்வராக கூட ஆகாத ஒருவரின் பெயரை இந்திய நாட்டின் தலைவர்கள் முனுமுனுக்க காரணம் ராகுல் காந்தியை பிரதமராக அறிவித்தது தான். மோடியா ராகுலா என்ற விவாதம் எழுவதற்கு முழு காரணம் ஸ்டாலின் தான். ஸ்டாலின் ராகுல் பெயரை அறிவிக்காமல் இருந்தால் மோடிக்கு எதிராக வேறு ஒருவர் இருந்திருப்பார். ஸ்டாலினுக்கு எதிராக தமிழகத்தில் வேறொருவர் கிடையாது. காங்கிரஸ் கம்யூ கட்சியினர் கூட திமுக தலைவர் ஸ்டாலினை வழிகாட்டியாக ஏற்றுகொண்டுள்ளனர்.
இந்த தேர்தல் பாஜக எனும் அடிமைதனத்தில் இருந்து விடுதலை பெற்று தரும் சுதந்திர போர் என பிரகடனம் செய்தவர் ஸ்டாலின். திமுக அரசியல் இயக்கமாக உருவானதல்ல அடிமைதனத்தை ஒழிக்க உருவான இயக்கம். தமிழகத்தில் நடக்கு ஆட்சியை காலி செய்வதற்கு நடைபெற்ற 18 இடங்களில் அவர்களுக்கு மெஜாரிட்டி கிடைக்காது. 5 இடங்கள் கூட அவர்களுக்கு கிடைக்காது. அதனால் தான் என்றைக்கோ செய்த தவறுக்காக 3எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர். மூன்று இடங்கள் பெற்றால் போதும் என அவர்கள் இந்த 4 தேர்தலில் போட்டியிடுகிறார். அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிடுபவர் அவர்களோடு இருந்தவர் அவரோடு சம பலம் பொருந்தியவர் அரவக்குறிச்சி 100க்கு 120சதவீதம் வெற்றி பெறும்.
25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக கூட வரும் வாய்ப்பு உள்ளவர் ஸ்டாலின்.அவருக்கு அந்த அளவுக்கு அரசியல் தெரிந்தவர். கட்சியில் உள்ள பூசல்களை தேர்தல் முடியும் வரை மறக்க வேண்டும். தேர்தல் முடிந்தபின்னர் நானே வந்து குருப் பால்டிக்ஸை உருவாக்கி தருகிறேன். அப்போது தான் நல்ல பணி செய்வீர்கள். திமுகவினரை வெல்ல போகும் தந்திரம் எடப்பாடி ,ஓபி.எஸ்க்கு கிடையாது.அவர்கள் எமாந்த காலத்தில் ஏற்றுகொண்டவர் .திமுக தலைவரை தலைகுணிய வைக்கமாட்டோம் என தாய் மீது சத்தியம் செய்து களத்தில் வெற்றியோடு திரும்ப தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
கூட்டத்தில் முன்னதாக பேசிய ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே என் நேரு எம்.ஜி.ஆர் காலத்தில் கூட எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு பதவி மரியாதை கிடைத்தது. கடந்த 10 ஆண்டுகளில் திமுகவினருக்கு எந்த பதவியும் மரியாதையும் கிடைக்கவிடாமல் ஜெயலலிதா பார்த்துகொண்டார். பதவி மரியாதை கிடைத்து திமுக சிறக்க கட்டாயம் ஆட்சி அமைக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் , பூங்கோதை ஆலடி அருணா மைதீன்கான் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எந்த காலத்திலும் ஸ்டாலின் முதல்வராக வரமுடியாது – பன்னீர்செல்வம் தாக்கு!..
எந்த காலத்திலும் ஸ்டாலின் முதலமைச்சராக வரவே முடியாது என்று ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசினார். ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். மோகனுக்கு ஆதரவாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் குறுக்குச்சாலை, தருவைக்குளம்,தாளமுத்துநகர், தேவர்காலனி மற்றும் கோரம்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், “புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட கழகம் யாராலும் அசைக்க முடியாத ஒரு இரும்புகோட்டையாகும். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்களுக்கு வழங்கி ஒருபொற்கால ஆட்சியை வழங்கினார். மக்களுக்கு தேவையான திட்டங்கள் மட்டுமல்லாது, அன்றாடம் தேவைப்படும் அனைத்து திட்டங்களையும் பார்த்துபார்த்து நாட்டு மக்களுக்கு செய்தார். 4கிராம் தங்கம், அத்துடன் ரூ.25,000திருமண நிதி உதவி, பட்டதாரி பெண்கள்என்றால் அவர்களுக்கு 4 கிராம் தங்கத்துடன் சேர்த்து ரூ.50000 நிதிஉதவியை புரட்சித்தலைவி அம்மாஅவர்கள் வழங்கினார்.
2016ம் ஆண்டு வரை இத்திட்டத்தினை வழங்கினார். அதனை தொடர்ந்து 2016 சட்டமன்றதேர்தலில் 4கிராம் தங்கத்தை 8கிராமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையாக அம்மா அவர்கள்அறிவித்தார். இன்றைக்கு அம்மாவின்அரசை தலைமை தாங்கி நடத்தி வரும்ம முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 8கிராம் தங்கமாக உயர்த்தி வழங்கிவருகிறார். பெண்களுக்கு பேறு கால நிதிஉதவியாக 2011-ம் ஆண்டு ரூ.12000 ஆகஉயர்த்தி அம்மா வழங்கினார்.
2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ரூ18000ஆக வழங்கப்படும் என்றுதெரிவித்தார். தற்போது அம்மாவின் அரசு ரூ.18000 ஆக உயர்த்தி வழங்கி வருகிறது. இப்படி அம்மா அவர்கள் பார்த்து பார்த்து செய்திட்ட அனைத்து திட்டங்களையும் இன்றைக்கு நல்லாட்சி நடத்தி வரும் அம்மாவின் அரசு மக்கள் நலன் சார்ந்ததிட்டங்கள், சமூக பாதுகாப்பு திட்டங்கள்,தொலை நோக்கு திட்டங்கள், இப்படி எந்தவொரு திட்டத்தையும்க குறைக்கவில்லை. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை, முந்திரிபருப்பு உள்ளிட்டபொருட்களை வழங்கினார். தற்போது அந்த பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ஆயிரம் ரூபாய் பரிசாக மக்களுக்குஅதிமுக அரசு வழங்கி வருகின்றது.
மேலும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 2000ரூபாய் வழங்கப்படும் திட்டத்தினை அறிவித்து வழங்கினோம். ஆனால், திமுகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தனர்.
நிச்சயம் இந்த தேர்தல் முடிந்த பின் அதிமுக அரசு வழங்கும். எந்த காலத்திலும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகவரமுடியாது தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது. சிறுபான்மைமக்களுக்கு பாதுகாப்புமிக்க மாநிலமாக தமிழகம் உருவாகியுள்ளது. ஆனால் இன்றைக்கு அரசியல் காழ்புணர்ச்சிகாரணமாக திமுகவும், இன்னொரு பக்கம் நம்மிடமிருந்து ய பிரிந்து சென்ற துரோகிகளும் பல்வேறு பொய்பிரச்சாரங்களை செய்கின்றனர். இந்த இயக்கத்தை அழித்துவிட வேண்டுமென்ற எண்ணத்தில் தனியாக ஒரு இயக்கத்தை உருவாக்கியுள்ளனர்.
கழகத்திற்கு எதிராக தனிக்கட்சியோ, ஜாதிக்கட்சியோ தொடங்கியவர்கள் யாரும் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. ஏனென்றால் புரட்சித்தலைவர் இந்த இயக்கத்தை தொண்டர்களால் உருவாக்கினார். இது தொண்டர்கள் கட்சி. இன்றைக்கும் தொண்டர்களால் இயக்கப்படும் ஒருமாபெரும் இயக்கமாக இந்த இயக்கம் உள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்த இயக்கத்திற்கு வந்தசோதனைகளையும் வேதனைகளையும் தனதாக்கி கொண்டு, இந்த இயக்கத்தை அழிக்க நினைத்த கருணாநிதி சதிகளைஎல்லாம் முறியடித்து ஒரு அசைக்கமுடியாத எக்கு கோட்டையாக கழகத்தை உருவாக்கியுள்ளார்.
திமுகஆட்சிக்காலத்தில் பல்வேறு அராஜக செயல் நடைபெற்றது. அதிலும் குறிப்பாக நில அபகரிப்பை திமுகவே செய்தனர். தற்போது ஸ்டாலின் அதிமுக காணாமல்போய்விடும் என்று கூறி வருகிறார். இந்த இயக்கத்தில் ஒன்றரை கோடிதொண்டர்கள் உள்ளனர். இவர்கள் தமிழகம் முழுவதும் ஆலமர விழுது போல் படர்ந்துள்ளனர். எப்படி காணாமல்போகும். அதிமுக அரசு ஒவ்வொறு திட்டங்களையும் குறையில்லாமல் பார்த்து பார்த்து மக்களுக்கு சேவை செய்து வருகின்றது.” என்றார்.
தேர்தல் பிரச்சாரத்தில்அமைச்சர்கள் காமராஜ்,கே.டி.ராஜேந்திரபாலாஜி,கடம்பூா்ராஜூ,ராஜலட்சுமி,, விஜயபாஸ்கர்,சேவூர்ராமச்சந்திரன்,, மணிகண்டன்மற்றும் அதிமுக நிர்வாகிகள், கூட்டணிகட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பள்ளிகொண்டா அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதல் 6 பேர் பலி . வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த மாதனூர் அருகே முன்னாடி சென்ற கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் 4 ஆண்கள் உள்ளிட்ட 6 பேர் பலி ஆனார்கள்.
இறந்தவர்களின் விவரம் பற்றி தற்போது போலீசார் சேகரித்து வருகின்றனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.