ராமநாதபுரம், நவ.18-
ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோயிலில் இருந்து சபரிமலைக்கு ஆன்மிக பயணம் செல்லும் அய்யப்ப பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை முதல் நாள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று கார்த்திகை முதல் நாளையொட்டி ஏராளமான அய்யப்ப பக்தர்களுக்கு குருவடியார் ஆர்.எஸ். மோகன் சுவாமி மாலை அணிவித்தார். இதனை முன்னிட்டு கோயில் சன்னதி இன்று காலை 5 மணிக்குள் திறக்கப்பட்டு கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வல்லபை விநாயகர், அய்யப்பன், மஞ்சமாதா சன்னதிகளில் சிறப்பு பூஜை நடந்தது.
இக்கோயிலில் கார்த்திகை முதல் நாளிலிருந்து 48 நாள்இரவு பஜனை, கூட்டு பிரார்த்தனை, அன்னதானம் நடைபெறும். மக்கள் நலமுடன் வாழவும், தேவையான அளவு தண்ணீர் கிடைக்க மழை பெய்ய வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. வல்லபை அய்யப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.
இது குறித்து வல்லபை அய்யப்பன் கோயில் குருவடியார் மோகன் சுவாமி கூறியதாவது: கலியுக வரதன், கண் கண்ட தெய்வம் அய்யப்பன் அருளால் விரதம் மேற்கொள்ளும் சாமிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. சபரி மலை அய்யப்பன் ஆலயம் போல இந்த ஆலயம் அமைந்துள்ளது. இங்கு இன்று கார்த்திகை முதல் நாளில் தரிசனம் செய்வதற்காகவும் மாலை அணிந்து கொள்வதற்காகவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். மேலும் சபரிமலை செல்ல முடியாத சாமிமார்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து தங்களின் இருமுடியை ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் ஆலயத்தில் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக பிளாஸ்டிக் விழிப்புணர்விற்காக இரு முடிப்பையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதில்லை. புகையிலை பழக்கம் உள்ளோர், 41 நாட்களுக்கு குறைவாக விரதம் இருப்போருக்கு இரு முடி கட்டப்படுவதில்லை. சபரிமலையில் கடைப்பிடிப்பதை போன்ற சுயக்கட்டுப்பாடு, ஒழுக்க நெறியுடன் போதிக்கப்படுகிறது என கூறினார்.
You must be logged in to post a comment.