இராமநாதபுரம், ஜன.6-
தேசிய வேளாண் மேலாண் விரிவாக்கப் பயிற்சி நிலையம், ஹைதராபாத் 2003-ம் ஆண்டிலிருந்து வேளாண் இடுபொருட்கள் பற்றிய அடிப்படை அறிவை இடுபொருள் விற்பனையாளர்களுக்கு அளிக்கும் வகையில் வேளாண் விரிவாக்க சேவைக்கான ஓராண்டு பட்டப்படிப்பை நடத்திவருகிறது.
வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் இடுபொருள் வழங்குவதுடன் மட்டுமல்லாமல் வேளாண் களம் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குவதில் முதன்மையாக விளங்குகின்றனர். பெரும்பாலான வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் வேளாண் சார்ந்த முறையான கல்வியை பெற்றிருப்பதில்லை. தற்போது மாறிவரும் தட்பவெப்ப சூழ்நிலைகளால் புதுவிதமான பூச்சி மற்றும் நோய்கள் பயிர்களை தாக்குகின்றன. வேளாண்மையில் அவர்களது தொழில்நுட்ப அளவை மேம்படுத்துவதற்கும், விவசாயிகளுக்கு நல்லமுறையில் பயன்பெறும் வகையிலும், தேவையை அறிந்து தேவையான இடுபொருட்களை சரியான தருணங்களில் விவசாயிகளுக்கு வழங்கி வேளாண் விரிவாக்கப் பணியாளர்களுக்கு துணையாக விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர்களாக செயல்புரியவும் ஓராண்டு பட்டயப்படிப்பை தேசிய வேளாண் மேலாண் விரிவாக்கப் பயிற்சி நிலையம் நடத்திவருகிறது. இந்த படிப்பு, மாநில வேளாண் மேலாண் விரிவாக்கப்பயிற்சி நிலையம் (சமிதி) மூலம் வேளாண் ஆணையர், சென்னை தேர்வு செய்த இணைப்பு பயிற்சி நிலையங்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இப்படிப்பு சுயநிதி மூலம், மத்திய அரசின் 50 சதவீத மானிய நிதியுடன் நடத்தப்பட்டு வருகிறது. குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும். சுயநிதி முறையில் படிப்பதாக இருந்தால் ரூ.20,000, மத்திய அரசின் 50சதவீத மானிய நிதி மூலம் பயில்வதாக இருப்பின் ரூ.10,000 வேளாண் விற்பனை நிறுவனங்கள் மூலம் படிப்பதாக இருந்தால் அந்நிறுவனம் ரூ.10,000, எஞ்சியுள்ள ரூ.10,000 மத்திய அரசு மற்றும் இடுபொருள் விற்பனையாளரும் தலா ரூ.5000 வீதம் படிப்புத் தொகை செலுத்த வேண்டும். இப்படிப்பு, வாராந்திர வகுப்புகளாக வாரந்தோறும் சனி (அ) ஞாயிறு (அ) விற்பனை விடுமுறை நாளன்று நடத்தப்படும். இப்படிப்பில் ஆர்வமுள்ளவர் விண்ணப்பிக்க வேளாண் இணை இயக்குநர், ராமநாதபுரம் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் வேளாண் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.