இராமநாதபுரம், செப்.20 – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை துறை சார்பில் கரும்பு விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் தெரிவிக்கையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, கமுதி வட்டங்களில் 2,500 ஏக்கர் பரப்பில் கரும்பு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கரும்பு விவசாயத்தை பொருத்தவரை பணம் கையிலிருந்து செலவழித்து விவசாயம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. போதிய கடனுதவிகளை விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் நேரடியாக வழங்கினால் கரும்பு சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வருவர். விவசாய காலங்களில் மான், காட்டுப்பன்றிகள் அதிகளவு இழப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு நேரடியாக கடனுதவிகள் வழங்கிடவும், மற்ற மாவட்டங்களில் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்குவது போல் இங்கும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க கூட்டுறவு வங்கிகள் சக்தி சுகர்ஸ் நிறுவனம் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்படும். விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கரும்புக்குரிய கட்டணத்தை விவசாயிகளுக்கு வழங்கி கூட்டுறவு வங்கியில் தொடர்ந்து கடன் பெற்று பயன்பெறும் வகையில் விவசாயிகளுக்கு சக்தி சுகர்ஸ் நிறுவனம் உறுதுணையாக இருக்க வேண்டும். கரும்பு விவசாயத்தை காட்டுப்பன்றி, மான் தாக்குதலில் இருந்து பாதுகாக்க சக்தி சுகர்ஸ் நிறுவனம் மானியத் திட்டத்தில் சோலார் முள்வேலி அமைத்து கொடுக்கப்பட்டு வருகிறது. 3 ஏக்கர் பரப்பிற்கு சோலார் முள்வேலி அமைக்க ரூ. 15,000 கட்டணம் என்றால் அதில் ரூ.10,000 சக்தி சுகர்ஸ் நிறுவனம் செலுத்துகிறது. மீதி ரூ.5000 ஐ விவசாயிகள் செலுத்தினால் போதும். இத்தகைய திட்டத்தை கருப்பு விவசாயிகள் பாதிப்புள்ள பகுதிகளில் அமைத்து பயன்பெறலாமென மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.
வேளாண்மை துறை இணை இயக்குநர் (பொ) தனுஷ்கோடி, கரும்பு விவசாயிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.