இராமநாதபுரம், செப்.19- பாரம்பரிய தொழில்களை ஊக்கும் பொருட்டு மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் அமைச்சகம் விஷ்வ கர்மா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் இணைந்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் உறுப்பினர்களுக்கு பிஎம் விஸ்வ கர்மா சான்று அடையாள அட்டை, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
தொழில் சார்ந்த கருவிகளை வாங்க ரூ 15 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும். முதல் தவணையாக ரூ 1 லட்சம் வட்டியில்லா கடன். 2 வது தவணையாக ரூ 2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படும். இத் திட்டம் மூலம் கைவினை கலைஞர்களின் குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு ஊக்கம் அளிக்கப்படும். கைவினை கலைஞர்களின் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். கைவினை கலைஞர்களின் தயாரிப்புகளை உள்நாடு, வெளிநாடு விற்பனை சங்கிலியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காலணி தைப்பவர், தச்சர், கொல்லர், பொற்கொல்லர், கொத்தனார், கூடை பின்னுவோர், பூமாலை கட்டுபவர், சலவை தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்போர், பூட்டு தயாரிப்போர் உள்ளிட்டோர் விஸ்வ கர்மா திட்டத்தில் இணையலாம். இந்த திட்டத்தில் கடன் கேட்டு அது அங்கீகரிக்கப்பட்டால் உடனடியாக கடன் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். நீங்கள் 3 முதல் 5 ஆண்டு காலத்தில் கடனை திரும்ப செலுத்த வேண்டும். பிஎம் விஸ்வ கர்மா திட்டத்தில் இணைய விரும்புவோர் பொது சேவை மையம் மூலம் https://pmvishwakarma.gov.in என்ற இணையதளத்தில் முன் பதிவு செய்ய வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் சம்மேளனம் பரிந்துரை படி காந்திஜி மீனவர் சங்க தலைவர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா வட்டாணம் அருகே தாமோதர பட்டினத்தை சேர்ந்த நாட்டுப்படகு வலை பின்னும் தொழிலாளி பழனிவேல், ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் சம்மேளன உறுப்பினர் ராமேஸ்வரம் நடராஜபுரத்தைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர் கருப்பசாமி ஆகியோருக்கு செப்.17ல் டில்லியில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அடையாள அட்டை வழங்கினார். பிரதமரை சந்தித்து விட்டு ஊர் திரும்பிய பழனிவேல், கருப்பசாமி ஆகியோரை ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவரும் இயற்கை விவசாயியுமான தரணி ஆர். முருகேசன் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். பாஜக ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் எஸ்.பி. குமரன் உடனிருந்தார்.
You must be logged in to post a comment.