ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் அ.தி.மு.க., வேட்பாளர் மோகனுக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும்,செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று காலை சென்னையில் இருந்து விமானம் முலம் தூத்துக்குடி வந்த ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் அ.தி.மு.க வேட்பாளர் மோகனுக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க., பா.ஜ.க மற்றும் பா.ம.க., கட்சிகளின் முற்போக்கு கூட்டணிக்கட்சிகள் வெற்றி பெறுவோம் என்ற நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது. ஓட்டப்பிடாரத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் 7 முறை அ.தி.மு.க, வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த தேர்தலிலும் ஓட்டப்பிடாரம், அதிமுகவின் எஃகு கோட்டை என்பதை வெற்றி பெற்று நிரூபிப்போம்.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் முடிந்தவுடன் வெற்றி பரிசாக மக்களின் நீண்டகால கோரிக்கையான புதிய தாலுகா நீதிமன்றம் அமைக்கப்படும்.
விவசாய பாசனத்திற்கான நீர் தேவைக்கு கொம்பாடி அணையில் தடுப்பணை கட்டுவதற்கு கருத்துரு தயாரிக்கப்பட்டு திட்டம் பரிசீலனையில் உள்ளது.
வேலைவாய்ப்பை பெருக்குவதற்கு தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
நாங்கள் நிர்ணயித்துள்ளது 50ஆயிரம் வாக்குகள் ஆனால், மக்களின் எழுச்சிமிகு வரவேற்பை பார்க்கும் போது 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அ.தி.மு.க., வேட்பாளர் மோகன், “ஓட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை என்பது அனைவருக்குமே தெரியும். இந்த முறை நான் வெற்றி பெற்றால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களும் முழுமையாக செயல்படுத்த பாடுபடுவேன்.” என்றார்.
You must be logged in to post a comment.