விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி, இன்று காலை விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் நிகழ்ச்சி, தேர்தல் பரப்புரை செய்வதற்காக வந்துள்ளார். முன்னதாக திமுக கட்சி அலுவலகத்திற்கு வந்த கனிமொழி, பெரியார் மற்றும் கருணாநிதி படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை துவக்கினார். சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் அச்சக உரிமையாளர்களை சந்தித்த பின்பு, பட்டாசு தொழிலாளர்களை சந்தித்து கனிமொழி எம்பி பேசினார். பின்னர் விருதுநகருக்கு செல்லும் வழியில் காரனேசன் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட் பகுதியில், வேனிலிருந்து இறங்கிச் சென்று வியாபாரிகள், பொதுமக்களிடம் பேசினார். அப்போது மாநில எடப்பாடி அரசு, மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் அரசாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்னோக்கி சென்றுள்ளது. சாமானிய, நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் உள்ளனர். வரும் சட்டமன்ற தேர்தல் தமிழக மக்களை மீட்டெடுக்கும் தேர்தல். நிச்சயம் திமுக கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று கனிமொழி எம்பி பேசினார். திருச்சுழி எம்எல்ஏ தங்கம்தென்னரசு உட்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். விருதுநகர் அருகேயுள்ள ஆமத்தூரில் நடைபெறும் கிராமசபை நிகழ்ச்சிக்காக கனிமொழி எம்பி புறப்பட்டு சென்றார்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.