திருநங்கை வாழ்வியல் மேம்பாடு பற்றிய கருத்தரங்கம் தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.
அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி, இந்திய மருத்துவ சங்கம், தூத்துக்குடி கிளை மற்றும் பியரல் சிட்டி ரோட்டரி சங்கம் ஆகியோர் இணைந்து இக்கருத்தரங்கத்தை நடத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மனநல மருத்துவர் எஸ். சிவசைலம் அவர்கள் பேசியதாவது, நமது நாட்டில் மூன்றாம் பாலினத்தவர்கள் பற்றிய அடிப்படை புரிதல்கள் பொது மக்களிடம், ஏன் படித்தவர்களிடம் கூட இல்லை. அவர்கள் வேண்டும் என்றே தம்மை மாற்றிக் கொண்டார்கள் என்று கூட எண்ணுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.
அவர்கள் உளவியல் மற்றும் உடலியல் ரீதியாக தம்முள் ஏற்படும் மாற்றத்தினாலே தம் பாலினத்தை மாற்றிக் கொள்கிறார்கள். பருவ வயதில் ஹார்மோனின் தன்மையில் ஏற்படும் ஏற்றத் தாழ்விலும் இது உண்டாகும். ஆனால் இதற்கான உண்மையான காரணம் எதுவென்று இது வரையிலும் கண்டறியவில்லை.
சமூகத்தாலும், குடும்பத்தாலும் வெறுக்கப்பட்டும், ஒதுக்கப்படும் இவர்களின் இயலாமையினாலும், வாழ்கின்ற சூழலின் காரணமாக பல குற்றவியல் சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர்.
திருநங்கைகள் தமது பாலினத்திற்காக இந்த சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுகின்றனர். இது இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒருவர் பாலினத்தை வைத்து வேறுபாடு காட்டக் கூடாது என்ற தனி நபர் சுதந்திரத்திற்கு எதிரானது என்றார். மேலும் திருநங்கைகள் சமூக ஏற்றத்தாழ்வுகளாலும், பாலியல் வன்முறைகளாலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருநங்கை வாழ்வியல் மேம்படுத்த அவர்கள் மீண்டும் சமூகம் சார்ந்த பாதையில் கொண்டு வருவதற்கு அனைவரும் அக்கறையும், பொறுப்பும் எடுக்க வேண்டும் என்றார். மேலும் அதிக மன உளவியல் நோய்கள், தற்கொலைகளால் பாதிக்கப்படும் திருநங்கைகளுக்கு அவர்தம் குடும்பத்தினர் நேசகரம் நீட்ட வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியை அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி முதல்வர் டாக்டர். ஜாய்சிலின் சர்மிளா அவர்கள் தொடங்கி வைத்தார். பியரல் சிட்டி ரோட்டரி சங்கம் திரு. பாலமுருகன் அவர்கள் வாழ்த்தி பேசினார். கல்லூரி பேராசிரியை டாக்டர். சுதா குமாரி அவர்கள் நன்றி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 24 திருநங்கைகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.