அரியலூர், திருச்சி, வேலூர், திருண்ணாமலை, விழுப்புரம் என 5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை வரும் ஏப்.1ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதன்படி, ஆண்டுதோறும் ஏப்.1ம் தேதி சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம்.
இந்தநிலையில், போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலின்படி, தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளின் கட்டணங்களை உயர்த்த உள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள மணகெதி சுங்கச்சாவடி, திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லக்குடி சுங்கச்சாவடி, வேலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் சுங்கச்சாவடி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இனம்கரியாந்தல் சுங்கச்சாவடி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை வரும் ஏப்ரல் 1ம் தேதி உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் 20 வரையிலும் உயர்கிறது. இதுமட்டுமல்லாது, மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரையும் உயர்த்தப்பட உள்ளன. ஏற்கனவே, நெடுஞ்சாலைகளின் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தற்போது ஐந்து சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.