கொரோனா வைரஸின் தாக்கம் மொத்த உலகையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸின் துவக்கம் சீனா என்றாலும் தற்போது சீனாவை விட இத்தாலியில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா தனது கணக்கை துவங்கியுள்ளது. 290 க்கும் அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டு ஐந்து நபர்கள் மரணமடைந்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் கொரோனா அச்சம் இல்லை என்று கூறிவந்த தமிழக அரசு தற்போது படிப்படியாக அதிகரித்த அடிப்படையில் மொத்தம் 6 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. டெல்லியிலிருந்து சென்னை வந்த நபரிடம் கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்தில் சமூக பரவல் எனும் நிலையை அந்நோய் எட்டிவிடுமோ என்று பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் வேகமாக பரவக்கூடிய கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசும் மக்களும் செயல்பட வேண்டும். கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மருத்துவர்கள், சுகாதாரத்துறை நிபுணர்கள் சொல்லும் தூய்மை சார்ந்த அறிவுரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.
நம்மையும், நம் இருப்பிடத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம். சில மாவட்டங்களில் தவ்ஹீத் ஜமாஅத் களப்பணியாளர்கள் இத்தகைய பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். தமிழக அரசு தற்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அவசர காலத்தில் மக்கள் தொண்டாற்றிட தவ்ஹீத் ஜமாஅத்தில் 10,000 களப்பணியாளர்கள் உள்ளனர்.
மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி சுகாதாரத்துறையினருடன் இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வு வழங்குவது, தூய்மையை வலியுறுத்தும் பணிகளையாற்றிட தவ்ஹீத் ஜமாஅத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
You must be logged in to post a comment.