நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் பச்சைக்கண்ணன். இவருடைய மகன் சிவா என்ற சிவக்குமார் ( 40). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.இவருடைய சகோதர் முத்துக்குமார். இவர், தூத்துக்குடி நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2005-ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளத்தில் பச்சைபெருமாள் என்ற ஆத்திபழம் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிவகுமார் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.இதுதொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சிவகுமார் காரில் தூத்துக்குடிக்கு வந்தார். அவர்,காரை கோர்ட்டுக்கு அருகே நிறுத்திவிட்டு நடந்து செல்லும்போது அவ்வழியாக பைக்கில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் , சிவகுமாரை வழிமறித்து கத்தி மற்றும் வெட்டரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.
சம்பவ இடத்துக்கு வந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், நகர துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சிவகுமாரை கொலை செய்தது, பச்சைபெருமாளின் தம்பி, ராஜேஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 10 பேர் என்பது தெரியவந்தது.பழிக்குப்பழியாக நடந்த இக்கொலை குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்திற்கு மிக அருகிலேயே தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம், நீதிமன்றம் இருப்பது குறிப்பிடத்தக்கது. கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
You must be logged in to post a comment.