மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு ஒன்பதாம் வகுப்பு மாணவி நிவாரண உதவி-பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் பாராட்டு..
வாசுதேவநல்லூரில் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு ஒன்பதாம் வகுப்பு மாணவி நிரஞ்சனா திறனாய்வு தேர்வில் பெற்ற ஊக்கத்தொகை மற்றும் தனது சேமிப்பு தொகையிலிருந்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். மாணவியின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் நகர பஞ்சாயத்து பகுதியில் உள்ள 30 மாற்றுதிறனாளிகள் குடும்பங்கள், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் அன்றாட அத்தியாவசிய தேவைக்கு மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக நகர பஞ்சாயத்து அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த புதுமந்தை தெரு வீரமணிகன்டண்-ராஜதீபா என்பவரின் மகளும், தற்போது நாடார் உறவின் முறை காமராஜர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு முடித்திருந்த மாணவி நிரஞ்சனா(14).கடந்த வருடம் எட்டாம் வகுப்பில் பயிலும் போது தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதற்கு அரசு வழங்கிய கல்வி ஊக்க தொகை ரூபாய் 12000/-கடந்த வாரம் மாணவியின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. மேலும் மாணவி தான் சேமித்து வைத்திருந்த சிறுசேமிப்பு பணம் ரூபாய் 3000/மொத்தம் ரூபாய் 15000 ரூபாய்க்கும் 30 மாற்றுத் திறனாளி குடும்பங்கள் பயன் பெற அன்றாட தேவைகளான அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை நகர பஞ்சாயத்து நிர்வாகத்திடம் அவரது தந்தை வீரமணிகண்டன் ஓப்படைத்தார். அதை பேருராட்சி அலுவலகத்தில் வைத்து வழங்கும் பணி நடைபெற்றது.
நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் சுதா தலைமை வகித்து நிவாரண பொருள்களை வழங்கினார். இதில் முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் தவமணி, பள்ளி தலைமை ஆசிரியர் குமரேசன், குற்றாலம் மெட்ரோ ஆப் ரோட்டரி கிளப் தலைவர் கணேசன், மாணவி நிரஞ்சனா, அவரின் தந்தை வீரமணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். 9ம் வகுப்பு படிக்கும் மாணவி நிரஞ்சனாவின் இந்த செயலை, இப்பகுதியில் உள்ள சமுக ஆர்வலர்கள், பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.