கொரோனா தொற்று எதிரொலி: தென்காசி மாவட்ட முஸ்லிம்கள் தமது இருப்பிடங்களில் தொழுது கொள்ள அரசு தலைமை காஜி அறிவுறுத்தல்…
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் கூட்டுத்தொழுகையை தவிர்த்து, முஸ்லிம்கள் தமது இருப்பிடங்களில் தொழுது கொள்ள மாவட்ட அரசு தலைமை காஜி முஹ்யித்தீன் அப்துல் காதர் அன்சாரி அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து தென்காசி மாவட்ட தலைமை காஜி முஹ்யித்தீன் அப்துல் காதர் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் கடையநல்லூர் தாசில்தார் ஆகியோரின் கோரிக்கையின் படி, உலகில் பரவிவரும் கொரோனா வைரஸின் காரணமாக 21/ 3/ 2020 சனிக்கிழமை முதல் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும், கூட்டாக ஜமாஅத் தொழுகைக்காக மக்கள் கூட வேண்டாமெனவும், தமது இருப்பிடங்களில் தொழுது கொள்ளுமாறும் அரசு அறிவித்திருக்கிறது.
எனவே இனிமேல் தொழுகை அழைப்புகளில் (பாங்கில் )வீட்டில் தொழுது கொள்ளுமாறு கூறப்படும். எனவே பள்ளிவாசல்களில் ஐந்து வேளை தொழுகை நடைபெறும் போது தொழுகை நடத்தும் இமாம், தொழுகை அழைப்பாளர் (முஅத்தின்) மற்றும் ஊழியர்கள் மட்டுமே பள்ளிவாசலில் இருப்பார்கள். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையை விரைவாக முடித்து விடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் அனைவரும் இதனை கடைபிடித்து ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் அனைவருமே பள்ளிவாசலுக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது. அரசின் மறு அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும். மேலும் இந்த தகவல் குறித்து மக்கள் அறியும் வகையில் பள்ளிவாசல்களில் அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.