தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சி பகுதியில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் புதிய பல்பொருள் அங்காடியை (சூப்பர் மார்க்கெட்) மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் புதிய பல்பொருள் அங்காடியை (சூப்பர் மார்க்கெட்) மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், திறந்து வைத்து பார்வையிட்டு தென்காசி மாவட்ட கூட்டுறவு நிறுவனங்கள் தயாரிக்கும் தென்றல் தேங்காய் எண்ணெய், வசந்தம் பினாயில் ஆகியவற்றின் விற்பனையை தொடங்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்ததாவது, தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புக் கடன், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கடன், மாற்றுத்திறனாளி கடன், மகளிர் சுய உதவிக் கடன், நகைக்கடன் ஆகியவை வழங்கப்படுகின்றன. கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 20 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யும் கூட்டுறவு மருத்துவ கடை ஆலங்குளம், சங்கரன்கோவில் மற்றும் தென்காசி போன்ற இடங்களில் நடத்தப்படுகிறது.
சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பட்டா மாறுதல் போன்ற சேவைகளை வழங்கும் 80 பொது சேவை மையங்கள் மாவட்டம் முழுவதும் நடத்தப்படுகின்றன. கூட்டுறவு சங்கங்கள் மூலம் பல்பொருள் அங்காடிகள் திறக்கப்பட்டு தனியார் கடைகளை விட குறைந்த விலையில் அனைத்துப் பொருட்களும் தரமாக விற்பனை செய்யப்படுகின்றது. தென்காசி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகள், திருக்கோவில் அன்னதான திட்டம் மற்றும் அம்மா உணவகங்களுக்கு தென்காசி மாவட்டம் முழுவதும் மளிகை பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
மேலகரத்தில் உள்ள பாரதி நகரில் பொதிகை சூப்பர் மார்க்கெட் (பல்பொருள் அங்காடி) இப்பண்டக சாலையின் மூலம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு வீட்டு உபயோகத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் குறைந்த விலையில் உயர்தரத்துடன் கிடைக்கின்றன. மேலும் சிறப்பினமாக கூட்டுறவுத் துறையின் தனித்துவமான தயாரிப்புகளான மசாலா, நயம் செக்கு எண்ணெய் வகைகள் மற்றும் கொல்லிமலை காப்பி தூள் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து, எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த கூட்டுறவு பல்பொருள் அங்காடியில் குறைந்த விலையில் வீட்டிற்குத் தேவையான உபயோகப் பொருட்களை வாங்கி பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார்.
மேலும் மேலகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை பார்வையிட்டு 2 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ 5.80 லட்சம், 21 உறுப்பினர்களுக்கு ரூ. 13.57 லட்சம் பயிர் கடன்கள் மற்றும் 12 உறுப்பினர்களுக்கு ரூ. 5.04 லட்சம் கால்நடை பராமரிப்பு கடன்கள் என மொத்தம் 59 உறுப்பினர்களுக்கு ரூ 2441 லட்சம் அளவில் கடன்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நரசிம்மன், சரக துணைப்பதிவாளர் செல்வி. திவ்யா, கூட்டுறவு சார்பதிவாளர்கள் ரமேஷ்பாபு. ராஜ், கோபிநாத், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் மாரியப்பன், மேலகரம் பேரூராட்சி செயல் அலுவலர் அமானுல்லா, மேலகரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜீவானந்தம் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன், கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் மாரியப்பன், மாணிக்கம்., நைனா முகமது, துரைராஜ், ரெங்கராஜ், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.