தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோத புகையிலை பொருட்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். தென்காசி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் சார்பு ஆய்வாளர் சுதாகர் ரோந்து பணியில் இருந்தபோது சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையில் வைத்து விற்பனை செய்த தென்காசி முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சடாமுனி என்பவரின் மகன் சண்முகம்(77) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதே போன்று கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுக்குடி உலக மாதா கோவில் அருகே சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த வேலு என்பவரின் மகன் கார்த்திகேயன்(53) மீது சார்பு ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியன் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 1400 மதிப்பிலான 35 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்ததாக 06 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 94 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 437 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை காவல் துறையினர் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.