தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறை மூலம் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் துவக்கி வைத்தார்.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறை மூலம் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் 20.02.2024 அன்று நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தமிழ் ஆட்சி மொழி என்பது நிருவாக மொழியாகும். நிருவாகத்தில் மக்களுக்குத் தெரிந்த மொழியாக இருப்பதற்கு வழிவகை செய்வதாகும். ஆட்சி மொழிச் செயலாக்கம் என்பது நிருவாகத்தில் கையொப்பம், பதிவேடுகள், பயணநிரல், நாட்குறிப்பு, கடிதங்கள், முத்திரைகள் போன்றவற்றில் தமிழில் எழுதுவதும், பராமரிப்பதுமாகும்.
தமிழ் வளர்ச்சிக்கென அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. தமிழில் சிறந்த வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதும் பணியாளர்களுக்கு பரிசு வழங்கும் திட்டம், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்துதல், பணியாளர்களுக்கு பயிற்சியளித்திட ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம், 1330 குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதுதல் பாராட்டுப் பரிசு, தமிழில் சிறந்த நூல்களை வெளியிடுபவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம், பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை உருவாக்க சொல்வங்கித் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய அரசு அலுவலர்கள் அனைவரும் தமிழில் கோப்புகளை எழுத வேண்டும். தமிழ் ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தை அனைத்துத் துறைகளிலும், முழுமையாகச் செயல்படுத்துவது தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கிற நம் அனைவரின் கடமையாகும். தொடர்ந்து இப்பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் 21ஆம் தேதியும் நடைபெறுகிறது. எனவே அலுவலர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் வ.சுந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பா.அருள் மனோகரி, மதுரை உலகத் தமிழ்ச்சங்க மேனாள் இயக்குநர் (கூ.பொ) க.பசும்பொன், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் க.அ.முகம்மது ரியாசுதீன், திருநெல்வேலி மண்டிலத் தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் செ.சீலா செபரூபி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரா. ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.