விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ரூ.9.41 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்; தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்..
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண்மைத் துறையின் மூலம் 18 பயனாளிகளுக்கு ரூ.9.41 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் கு. பத்மாவதி வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கு. பத்மாவதி தலைமையில் 07.02.2024 புதன்கிழமை நடைபெற்றது. பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் கு. பத்மாவதி அவர்கள் தெரிவித்ததாவது, தென்காசி மாவட்டத்தில் 2023-2024 ஆம் ஆண்டில் சாகுபடி செய்யப்பட்ட நெல் – 38384 ஹெக்டேர், சிறுதானியங்கள்- 21127 ஹெக்டேர், பயறு வகைகள் 28417 ஹெக்டேர், பருத்தி-2740, கரும்பு 1416 ஹெக்டேர், எண்ணெய் வித்து – 1301 ஹெக்டேர், மலைப் பயிர்கள்- 14180 ஹெக்டேர், பழங்கள் 10177 ஹெக்டேர், காய்கறிகள் – 2128 ஹெக்டேர், வாசனைப் பயிர்கள் 877 ஹெக்டேர், மருத்துவப் பயிர்கள் 143 ஹெக்டேர், பூக்கள் 568 ஹெக்டேர் பரப்பும் ஒத்திசைவு செய்யப்பட்டது. மழையளவு, நீர் இருப்பு விபரம் மற்றும் இடுபொருட்கள் இருப்பு விபரம் அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நெல்லைத் தொடர்ந்து ஒரு பயனாளிக்கு ரூ.400 மானியத்தில் உளுந்து சாகுபடிக்கு உளுந்து விதைகளையும், சமையல் எண்ணெய்க்கான தேசிய இயக்கத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு சாகுபடி செய்வதற்காக ரூ.635 மானியத்தில் சூரியகாந்தி விதைகளையும், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.4,00,000 மானியத்தில் சுழற் கலப்பைகளையும், மேலும், தோட்டக்கலைத் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு வெங்காய கிட்டங்கி அமைப்பதற்காக ரூ.1,75,000 மானியமும், தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இரண்டு பயனாளிகளுக்கு மிளகாய் மற்றும் தக்காளி காய்கறி பரப்பு விரிவாக்கத்திற்காகவும் ரூ.24,000 மானியமும், தோட்டக்கலைத் துறை மூலம் ஒரு பயனாளிக்கு அயல்நாடு சுற்றுலா சென்று வந்ததற்கான சான்றிதழினையும், மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திர மயமாக்கல் துணைத் திட்டத்தின் கீழ், ஒரு பயனாளிக்கு ரூ.3,41,250 மானியத்தில் பறக்கும் தெளிப்பான் (ட்ரோன்) உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். முன்னதாக, ஆலங்குளம் வட்டார வேளாண்மைத் துறையினர், வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் வட்டார தோட்டக்கலைத் துறையினர் மற்றும் மாவட்ட பட்டு வளர்ச்சித் துறையினர் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியினை மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்து பார்வையிட திரளான விவசாயிகளும் கண்டு பயனடைந்தனர்.
இக்கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து 345 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் விரிவான மற்றும் விவசாயிகள் ஏற்றுக் கொள்ளக் கூடிய பதிலை வழங்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் கு. பத்மாவதி அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் கோ. பத்மாவதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்ணான்டோ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ச.கனகம்மாள், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சு.ஜெயபாரதி மாலதி, துணை இயக்குநர், வேளாண் விற்பனை மற்றும் வணிகம் சுப்பையா, வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய மற்றும் மாநிலத் திட்டம்) (பொ) மு.உதயக்குமார், உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) சங்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரா.ராமசுப்பிரமணியன் (செய்தி) மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், அனைத்து துறை அலுவலர்கள், அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.