தென்காசி மாவட்டத்தில் பேருந்துகளில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி; மகளிர் திட்ட இயக்குநர் தொடங்கி வைத்தார்..
தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி பேருந்துகளில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் முகாமினை 20.03.2024 அன்று தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் மகளிர் திட்ட இயக்குநர் இரா.மதி இந்திரா பிரியதர்ஷினி தொடங்கி வைத்தார். ஜனநாயகம், கண்ணியத்துடன் வாக்களியுங்கள், 100% நேர்மையாக வாக்களிப்போம், இந்த மை நமது தேசத்தின் வலிமை, வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை, 100% ஓட்டு இந்தியர்களின் பெருமை, நமது இலக்கு 100% வாக்குப்பதிவு, வாக்களிப்பது நம் அனைவரின் ஜனநாயக கடமை போன்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் அரசு பேருந்துகளில் ஒட்டப்பட்டன. மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து பேருந்துகளிலும் மார்ச்.20 முதல் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது.
பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகள் மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்களிடையே தேர்தல் அன்று அனைவரும் கட்டாயம் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் V.M. சிவக்குமார், M.மாரீஸ்வரன், அ.பிரபாகர், இ.சாமத்துரை, கலைச்செல்வி, தென்காசி அரசு போக்குவரத்து கழக மேலாளர் பாலசுப்பிரமணியன், புளியங்குடி அரசு போக்குவரத்து கழக மேலாளர் முருகன், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான SVEEP செயல்பாடுகள், ஆவின், கூட்டுறவுத் துறை, வேலை வாய்ப்பு அலுவலகம், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, சுகாதாரத் துறை, வங்கிகள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளிலும், கல்லூரிகளிலும் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் தினசரி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.