இரயில் விபத்தை தடுத்த தென்காசி மாவட்ட தம்பதியினர்; கடையநல்லூர் எம்எல்ஏ நேரில் சென்று பாராட்டு..
இரயில் விபத்தினை உரிய நேரத்தில் தடுத்து நிறுத்திய புளியரை பகுதி தம்பதியினரை கடையநல்லூர் எம்எல்ஏ குட்டியப்பா நேரில் சென்று பாராட்டி சன்மானம் வழங்கி கெளரவித்தார். தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், புளியரை கிராமத்தில் ’எஸ்’ வளைவு என்ற தமிழக-கேரள எல்லைப் பகுதியில், கடந்த பிப். 25-ஆம் தேதி நள்ளிரவு திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி செங்கோட்டை-கொல்லம் ரயில் மார்க்கத்தில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அதே நேரத்தில், செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி பயணிகள் ரயில் ஒன்று, அதே தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. இதனை அறிந்து கொண்ட சண்முகையா-வடக்குத்தியாள் தம்பதியினர் உரிய நேரத்தில் இந்த ரயிலை டார்ச் லைட் அடித்துக் கொண்டே ஓடிச்சென்று நிறுத்தி ஏற்படவிருந்த விபத்தை தடுத்தனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி 5 லட்சம் வெகுமதிகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் இத்தம்பதியரை பாராட்டி தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் C. கிருஷ்ண முரளி (என்ற) குட்டியப்பா சண்முகையா – வடக்குத்தியாள் தம்பதியினரை நேரில் சென்று சந்தித்து பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு சால்வை அணிவித்து சன்மானம் கொடுத்து கௌரவித்தார். இந்நிகழ்வில் செங்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்லப்பன், புளியரை ஊராட்சி மன்ற பத்தாவது வார்டு உறுப்பினர் சரவணன், ஒன்றிய மாணவரணி செயலாளர் முருகேசன், அங்கன் காலாடி கிளைக் கழக செயலாளர் இசக்கி துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.