நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மகளிருக்கான சிறப்பு போட்டிகள்; பரிசுகள் வழங்கல்..
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மகளிருக்கான சிறப்பு கலைப் போட்டிகள் நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தலைமையில் நடத்தப்பட்டன. 18 வயதிற்கு மேற்பட்ட ஏராளமான பெண்கள் மிகவும் ஆர்வத்துடன் இப் போட்டிகளில் கலந்து கொண்டனர். ஒரு நிமிட நட்சத்திரம் என்கிற போட்டியில் பல்வேறு பெண்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஒரு நிமிடத்திற்குள் நடனம், பாடல், தனிநடிப்பு, சிலம்பம் சுற்றுதல், கவிதை வாசித்தல் போன்ற பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற பசுமை சமையல் போட்டியில் அடுப்பில்லாத முறையில் வீட்டிலே தயாரிக்கப்பட்ட உணவுகளை கொண்டு வந்து காட்சிப்படுத்தி அவற்றின் முக்கியத்துவங்களை எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற ஒரு நிமிட பேச்சுப் போட்டியில் “மகளிர் மேம்பாட்டில் கலைஞரின் பங்கு” என்கிற தலைப்பில் பேசினர். “கையிலே கலைவண்ணம் கண்டோம்” என்கிற தலைப்பில் நடத்தப்பட்ட கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் கலைப் பொருள்கள் போட்டியும் நடைபெற்றது. போட்டிகளின் நடுவர்களாக சு.நாகஜோதி, வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர், முனைைர் சு. பொன்னி, பரத நாட்டிய கலைஞர் நெ. சுபதுர்க்கா, அ. பிரேமலதா, உதவிப் பேராசிரியர், செல்வி. மோதிதா பால், தூய சவேரியார் கல்லூரி, வேதிகா மனவளக்கலை பேராசிரியை, கவிஞர். உமா, முனைவர். கங்கா, செல்வி. இ.சுவஸ்மதி, கலை ஆசிரியை ஆகியோர் இருந்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இட்டாலியன் பேக்கரி உரிமையாளர் பாத்திமா கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்ச்சிகளை சூர்யா தொகுத்து வழங்கினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை என்.பி.என்.கே கலை பண்பாடு மன்ற ஒருங்கிணைப்பாளர் மூவெ ரா, ஸ்டார் கோச்சிங் சென்டர் உரிமையாளர் ரஹமது நிஷா பேகம், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பேராசிரியை முனைவர் பிரியதர்ஷினி, அகல்யா, சுப்புலட்சுமி ரம்யா, கவிஞர் சுப்பையா ஆகியோர் செய்திருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.