தென்காசியில் சர்வதேச தூய காற்று தின வாகன விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் துவங்கி வைத்தார். தென்காசி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினம் 2023-ஐ முன்னிட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் செப்.7 அன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, காற்று மாசுபாடு பூமியின் சுற்றுச்சூழல், பல்லுயிர் மற்றும் காலநிலை ஆகியவற்றை மோசமாக பாதிக்கிறது. மாசற்ற காற்று, மனிதர்களுக்கு மட்டுமல்ல பூமியின் அனைத்து உயிர்களுக்கு இன்றியமையாத தேவையாகும். ஆகவே 2019-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UNGA) அதன் நிலையான வளர்ச்சி குறித்த தனது எழுபத்து நான்காவது அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7-ஆம் தேதி நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினம் கடந்த 2020-ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
இத்தினத்தின் நோக்கமானது 2030-ஆம் ஆண்டுக்குள் காற்று, நீர் மற்றும் மண்ணில் உள்ள வேதிப்பொருட்கள் போன்ற மாசுக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் நோய்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்து அதன் மூலம் அனைவருக்கும் சுத்தமான காற்று என்ற தீர்மானத்தை ஐ.நா. ஏற்றுக்கொண்டது. எனவே காற்றின் தரம் மற்றும் கழிவு மேலாண்மை மூலம் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை குறைக்க நாமும் நமது பங்களிப்பினை வழங்க வேண்டியது அவசியமாகும். 2023-ஆம் ஆண்டிற்கான செப்டம்பர் 7-ஆம் தேதி கொண்டாடப்படும் நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினத்தின் கருப்பொருளான “தூய காற்றிற்காக ஒன்றிணைவோம்” “Together for Clean Air” என்பதை நாம் அனைவரும் நடைமுறைப்படுத்தி நீலவானின் துாய காற்றினை பெற்றிடுவோம் என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் D.சுகுமார், உதவி பொறியாளர் (சுற்றுசூழல்) A.ஜெபா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா. ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.