டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும்!- உயர்நீதிமன்றத்தில் SDPI அவசர பொதுநல வழக்கு தாக்கல்- இன்று விசாரணை..
தலைநகர் டெல்லியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தப்லீக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு, திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக 500க்கும் மேற்பட்ட தமிழர்கள் போக்குவரத்து வசதியின்றி வெளியேற முடியாமல் டெல்லி நிஜாமுதீன் பகுதியிலேயே தங்கி தவித்து வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் ஒரே இடத்தில் தங்கி இருந்த காரணத்தால், கொரோனா நோய் தொற்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 560 தமிழர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் பலரும் தொற்று இல்லை என்று கூறி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இவர்களில் மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4 பேர் மரணித்துவிட்ட நிலையில், முகாமில் தங்கியிருந்த கோவையை சேர்ந்த பொறியாளர் ஒருவர் நீரிழிவு நோய் காரணமாக போதிய மருத்துவ வசதி கிடைக்கப் பெறாமல் உயிரிழந்துவிட்டார்.
இந்த முகாமில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் கொரோனா தொற்று இல்லாமல் சுமார் 400க்கும் அதிகமான தமிழர்கள் கடும் சிரமங்களுடன் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதைப்போல உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஏராளமான தமிழர்கள் போதிய அடிப்படை வசதிகள், வாகன வசதிகள் இல்லாமல் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் அவர்களை உடனடியாக தமிழகம் மீட்டுவர உத்தரவிட வேண்டும். இடைக்கால நிவாரணமாக டெல்லியில் தவித்துவரும் தமிழர்களை மீட்க வேண்டும். அதுமட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் நோய் தொற்று இன்றி, வாகன வசதி இல்லாமல் தவித்துவரும் தமிழர்களை மீட்க வேண்டும் என்று கோரி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் ராஜா முகமது இந்த வழக்கை தாக்கல் செய்து, வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கு இன்று(28 ஏப்ரல்) மதியம் 2.30மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
ஏ.கே.கரீம் மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் SDPI கட்சி- தமிழ்நாடு
You must be logged in to post a comment.