சமூக வலைதளங்களில் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களின் விவரங்களை சமூக வலைதள நிறுவனங்களால் வழங்க முடியும் என ஐஐடி பேராசிரியர் மதுசூதனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் குற்றங்களில் ஈடுபட்டவர்களை எளிதில் அடையாளம் காண, சமூக வலை தள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி, ஆன்டனி கிளமென்ட் ரூபன் என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம்பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது யூ டியூப் தளங்களில் வீடியோக்கள் வாட்ஸ் அப் மூலம் பகிரப்படுவதற்கு வாட்ஸ் ஆப் நிறுவனம் எப்படி பொறுப்பேற்க முடியும் என கேள்வி எழுப்பியது. பல கோடி மக்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வரும் நிலையில், குற்றச்செயல் புரிபவர்கள் யார் என கண்டறித்து தகவல்களை வழங்குவது இயலாத ஒன்று என ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தமிழக அரசு தரப்பில், தகவல் தொழில்நுட்ப துறை வல்லுனரும், ஐஐடி பேராசிரியருமான மதுசூதனன் ஆஜராகி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் குறித்த தகவல்களை சமூக வலைதள நிறுவனங்களால் அரசுக்கு வழங்க முடியும் என தெரிவித்தார்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சமூக வலைதளத்தில் குற்றம் புரிவோரின் தகவல்களை பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்த விவரங்களை ஐஐடி பேராசிரியர் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.அதே வேளையில் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தமிழக அரசு கேட்கும் தகவல்களை எவ்வாறு வழங்க முடியும் என்பது குறித்து, அந்தந்த நிறுவன தொழில்நுட்ப வல்லுனர்களிடம் ஆலோசித்து விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆக்ஸ்ட் 21 ம் தேதி தள்ளி வைத்தனர்.
You must be logged in to post a comment.