15
இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (சிமி) மீதான தடையை நீக்குவதா அல்லது நீட்டிப்பதா என்பது குறித்து தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குன்னூரில் சனிக்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது.
சிமி இயக்கம் கடந்த 1977இல் உத்தரப்பிரதேசத்தில் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தை மத்திய அரசு தீவிரவாத இயக்கமாக அறிவித்து, 2002ஆம் ஆண்டு தடை செய்தது. இந்நிலையில் சிமி இயக்கம் மீதான தடையை நீக்குவதா அல்லது நீட்டிப்பதா என்பது குறித்து தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா தலைமையில் அமைக்கப்பட்ட சட்டவிரோதச் செயல்கள் தடுப்பு தீர்ப்பாயத்தின் அமர்வு சனிக்கிழமை (ஜூன் 22) முதல் வரும் 24ஆம் தேதி வரை 3 நாள்கள் குன்னூர் நகராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் விசாரணை நடத்த உள்ளது. இதுதொடர்பாக சாட்சியம் அளிக்க விரும்பும் நபர்கள் மேற்கண்ட நாள்களில் தீர்ப்பாயத்தின் முன்பு ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். “சிமி’ மீதான தடை குறித்த விசாரணை 3 ஆண்டுகளுக்கு முன்னர் குன்னூரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 22-06-2019 இன்று சனிக்கிழமை நடைபெறும் விசாரணையில், தில்லியில் இருந்து மத்திய அரசு வழக்குரைஞர்களும், இந்து முன்னணி சார்பில் கோவை, குன்னூரில் இருந்து வழக்குரைஞர்களும் ஆஜராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்தி தொகுப்பு அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ்
You must be logged in to post a comment.