15
சென்னையில் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு ஸ்கூட்டியில் சாமி கும்பிட வருபவர்களின் வாகனங்கள் அடுத்தடுத்து களவு போன சம்பவம் அங்கு வரும் பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து ஸ்கூட்டி திருடனை பிடிக்க உதவி ஆய்வாளர்கள் அலெக்ஸ் மற்றும் அகஸ்டின் ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
இதில் திருவான்மியூர் கோவில் ஒன்றின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டியை திருடிச்சென்ற மர்ம நபரைப் பிடித்து விசாரித்த போது அவன் பெருங்களத்தூரை சேர்ந்த அரிகரன் என்பதும் ஸ்கூட்டியை மட்டும் குறிவைத்து மாஸ்டர் கீ மூலம் திருடி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அரிகரன் இரவு நேரங்களில் டீ விற்கும் தொழில் செய்து வருவதும், பகலில் கோவிலுக்கு வெளியே நோ பார்க்கிங் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள ஸ்கூட்டி வாகனங்களை மட்டும் திருடிச்சென்று ரெயில்வே பார்க்கிங்கில் பத்திரப்படுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. திருடப்பட்ட வாகனங்களை 2500 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விலைவைத்து விற்று வந்த அரிகரன் தேனாம் பேட்டையில் சொந்தமாக வீடு வாங்கி இருப்பதாகவும், பெருங்களத்தூரில் மாதம் 25 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு பங்களா வீட்டில் குடியிருந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
நீண்டகாலமாக திருட்டில் ஈடுபட்டு வந்த இவர், கடந்த 2 மாதங்களில் மட்டும் 60 க்கும் மேற்பட்ட ஸ்கூட்டி வாகனங்களை திருடியுள்ளான். திருடன் அரிகரனிடம் இருந்து முதல் கட்டமாக 20 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 20 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. சென்னை சைதாப்பேட்டை, வண்டலூர், தாம்பரம் ரெயில் நிலைய வாகன நிறுத்தும் இடத்தை திருட்டு வாகனங்களை நிறுத்தி வைக்கும் இடமாக பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. சொந்தமாக இருசக்கர வாகன ஷோரூம் துவங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த வாகன திருட்டில் ஈடுபட்டதாக அரிகரன் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
அதே நேரத்தில் வாகனத் திருடன் அரிகரனிடம் குறைந்த விலைக்கு ஸ்கூட்டி கிடைக்கிறது என்ற பேராசையில் திருட்டு வண்டிகளை வாங்கி ஏமாந்த அனைவரும் தற்போது வண்டிகளை காவல்துறையினரிடம் பறிகொடுத்து விட்டு பேராசை பெரு நஷ்டம் என்று விழிபிதுங்கி நிற்கின்றனர்.
You must be logged in to post a comment.