Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் அருகே வைகை கரையில் சங்க கால நகரம் கண்டுபிடிப்பு..

இராமநாதபுரம் அருகே சோழந்தூரில் வைகை கிளை ஆறான நாயாற்று கரையில் சிதறிக் கிடக்கும் கருப்பு சிவப்பு பானை ஓடுகள் மூலம் புதைந்த நிலையில் ஒரு சங்க கால நகரம் இருந்த தடயத்தை இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் கண்டுபிடித்தனர்.

சோழந்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் குளங்களை தூர்வாரும் போது உடைந்த ஓடுகள் வெளிப்பட்டுள்ளன. அவ்வூர் அரசு உயர்நிலை பள்ளி மாணவர்கள் மூலம் இதை அறிந்த ஆங்கில ஆசிரியர் சுல்தான் ஜமீர் அலி, இது குறித்து இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜகுருவிடம் தகவல் தெரிவித்தார்.

அப்பகுதி மேற்பரப்பாய்வு செய்த பின் தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது: இவ்வூரின் தெற்கே இரண்டு பிரிவாக பிரிந்து ஓடும் நாயாறு, வைகையின் ஒரு கிளை ஆறாக இருக்கலாம். இது திருப்பாலைக்குடியில் கடலில் கலக்கிறது. இவ்வாற்றின் கரையில் ஓடுகள் சிதறிக் கிடக்கும் மேடான பகுதி திடல் என அழைக்கப்படுகிறது.

குளங்களை தூர்வாரிய போது சுடுமண் உறை கிணற்று ஓடுகள், தடித்த, மெல்லிய கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் வெளிவந்தன. ஒரு சுடு மண் உறையின் உயரம் 16.5 செ.மீ., அகலம் 4.5 செ.மீ. உறைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்குவது, செருகுவது என உறை கிணறுகளில் இரு வகை உண்டு. ஒரே அளவுள்ள இரு வட்டமான சுடு மண் உறைகளை ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய அமைப்பு கொண்ட கிணறு இங்கு இருந்துள்ளது.

திடல் பகுதியில் கருப்பு, சிவப்பு பானை ஓடுகளுடன், வெள்ளை களி மண்ணால் உருவாக்கப்படும் சீன நாட்டு போர்சலைன் ஓடுகள் காணப்படுகின்றன. இங்கு 50 ஏக்கர் பரப்பில் பானை ஓடுகள் சிதறி கிடக்கின்றன. இங்கிருந்து அரை கி.மீ. தூரத்தில் முதுமக்கள் தாழி ஓடுகளும் உள்ளன. இதற்கு இடைப்பட்ட பகுதியில் சன்னாப் மேடு என்னுமிடத்தில் செங்கலால் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தின் அடிப்பக்கம் மட்டும் உள்ளது. இதில் உள்ள உடைந்த ஒரு செங்கலின் அகலம் 15 செ.மீ. உயரம் 6 செ.மீ. இது அழிந்துபோன ஒரு கோயிலாக இருக்கலாம். இதனருகே கருங்கல்லால் ஆன முழுமையடையாத 5 அடி உயரத்தில அமர்ந்த நிலையில் ஒரு திருமால் சிற்பம் உள்ளது. அதை முனீஸ்வரராக வழிபடுகின்றனர். அதேபோல் குளத்தின் கிழக்கில் வட்ட வடிவ ஆவுடையாருடன் ஒரு சிவலிங்கம் உள்ளது.

இவ்வூரில் சங்க கால கருப்பு, சிவப்பு பானை ஓடுகளுடன் இடைக்கால தடயங்களும் காணப்படுகின்றன. இவ்வூரின் பெயர் சோழர்களை நினைவுபடுத்துகிறது. சங்க காலம் முதல் இடைக்காலம் வரை பல நூற்றாண்டுகளாக இவ்வூர் சிறப்புற்று இருந்துள்ளது. சங்க கால சர்வதேச வணிக நகரமான அழகன்குளத்தின் சம கால ஊரான இவ்வூர் அங்கிருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ளது.

இராமநாதபுரத்தில் இருந்து சோழந்தூர் செல்லும் வழியில் சக்கரவாளநல்லூர் சங்க கால, இடைக்கால வாழ்விடப் பகுதியாகவும், தேவிபட்டினம், சிங்கனேந்தல், முத்துசாமிபுரம் ஆகிய ஊர்கள் இடைக்கால வாழ்விடப் பகுதிகளாகவும் உள்ளன. மத்திய தொல்லியல் துறை அல்லது தமிழ்நாடு தொல்லியல் துறை இப்பகுதிகளில் அகழாய்வு செய்து இவ்வூரின் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிக்கொணர வேண்டும் என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!