இலங்கையில் இருந்து மன்னார் வளைகுடா கடல் வழியாக கடத்தி வந்த 9.7 கிலோ தங்க கட்டிகளை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர், இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இலங்கையில் இருந்து தங்கக்கட்டி, வாசனை திரவியங்கள், நறுமண சோப்பு ரகங்கள், தமிழகத்தில் இருந்து கஞ்சா, பீடி இலைகள், உள்ளிட்ட போதை பொருட்கள், சமையல் மஞ்சள், மருந்து, மாத்திரைகள் கடல் வழியாக மர்மப் படகு மூலம் கடத்தப்பட்டு வருகின்றன. தீவிர கண்காணிப்பு, பாதுகாப்பு கெடுபிடியையடுத்து கடத்தல் தொழிலை மர்ம கும்பல் தங்கள் ஏஜன்ட்கள் மூலம் கமிஷன் அடிப்படையில் எவ்வித தொய்வின்றி அரங்கேற்றி வருகின்றனர். ஏஜன்ட்கள் ஆலோசனை படி, இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்படும் தங்கம் உள்ளிட்ட பொருட்களை மன்னார் வளைகுடா தீவு மணலில் புதைத்து வைக்கும் புது யுக்தியை சமீப காலமாக பின்பற்றி வருகின்றனர். சுங்கத்துறை, மெரைன் போலீசார் கண்காணிப்பு பணி குறையும் நேரத்தில், மணலில் புதைத்த தங்கக்கட்டிகளை ஏஜன்ட்கள் படகுகள் மூலம் கரை சேர்க்கின்றனர். இங்கிருந்து காரில் சென்னை கொண்டு சென்று விற்று பணமாக்கி வருகின்றனர். தங்கக்கட்டி கடத்தல் கடந்த காலங்களில் பலமுறை தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் இருந்து கடல் வழியாக தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது இதனையடுத்து மண்டபம் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் இணைந்து மணாலி தீவு பகுதியில் இன்று அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நாட்டு படகில் சந்தேகத்திற்கிடமாக இருவரை பிடித்தனர். அவர்கள் இருவரும் தங்க கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மண்டபம் மரைக்காயர்பட்டினத்தை சேர்ந்த பையஸ் அகமத், முகமது பாரூக் ஆகிய என தெரிந்தது. அவர்களை பிடிக்க முயன்ற போது அருகில் மற்றொரு படகில் இருந்த முகமது ரசாக், ஜசிம் அஹமத், ஜெயினுல் பயாஷா ஆகிய மூவரும் இவர்களை தப்பி செல்ல உதவினர்.இதனையடுத்து கடலோர காவல் படை நெருங்கி வருவதை அறிந்த கடத்தல்காரர்கள் தங்கத்தை கடலில் வீச முயன்ற போது அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். இரண்டு நாட்டுப்படகு, 9.7 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணைக்காக 5 பேரையும், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர கால் படை முகாமிற்கு அழைத்து வந்தனர். விசாரணையில், இலங்கையில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை மனோலி தீவு பகுதியில் மறைத்து வைத்து விட்டு கடலோர காவல் படை ரோந்து பணி முடிந்ததும், மரைக்காயர்பட்டினம் கடற்கரைக்கு எடுத்து வர இருந்தது தெரிந்தது இலங்கையில் இருந்து கடத்தல்காரர்கள் யாரும் தங்கத்தை கொண்டு வந்து இவர்களிடம் கொடுக்கும் போது கடலோர காவல் படையின் ரோந்து படகு வருவதை கண்டு மணாலி தீவு பகுதிகளில் மறைந்துள்ளனரா என இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பல் மூலம் தீவு முழுவதும் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 9.7 கிலோ தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.4.5 கோடி என கூறப்படுகிறது
38
You must be logged in to post a comment.