
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத் துறை சார்பாக அம்மா நகரும் நியாய விலைக் கடையின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி வைத்தார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.மணிகண்டன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் என்.சதன்பிரபாகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய உணவு பொருட்கள் விநியோகம் செய்யும் பொருட்டு ரூ. 9.66 கோடி கூடுதல் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாய விலைக் கடைகள் துவங்கப்படும் என தமிழ்நாடு சட்ட பேரவையில் 2020-2021-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது பேரவை விதி 110-ன் கீழ் கடந்த மார்ச் 2020 அன்று தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். நகரும் நியாய விலைக் கடை மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்கள் குடியிருப்புக்கு அருகிலேயே இலவச அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கும் அப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 71 நகரும் நியாய விலைக் கடைகள் துவக்கி செயல்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்மாவட்டத்தில் 11,205 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர். பகுதி நேர நியாய விலைக்கடை அமைக்க இயலாத இடங்களில் நகரும் நியாய விலைக் கடைகள் செயல்படுத்தப்படவுள்ளது என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார். கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நடுக்காட்டு ராஜா, ராம்கோ கூட்டுறவு தலைவர் செ.முருகேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ராஜலெட்சுமி, துணை பதிவாளர் ராஜவேலன், மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டோபர் ஜெயராஜ், ராம்கோ மேலாண்மை இயக்குநர் கோவிந்தராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.