இந்திய-சீன எல்லையில் லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ ஹவில்தாரான தமிழக வீரர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடுக்களூர் கே.பழனி உள்பட 20 வீரர்கள் வீர மரணமடைந்தனர். இவர்களது உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் படி சிறப்பு விமானம் மூலம் மதுரை வந்த பழனியின் உடலுக்கு விமான நிலையத்தில் உயரதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதன் பின் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் மூலம் பழனியின் உடல் இன்று (18.6.2020) அதிகாலை அவரது சொந்த ஊரான கடுக்கலூர் கொண்டு வரப்பட்டது. உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட அவரது உடலுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து, முப்படைகளின் தளபதிகள் , நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி, ராமநாதபுரம் டிஐஜி., ரூபேஷ் குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார், சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ் (திருவாடானை), என்.சதன் பிரபாகர் (பரமக்குடி), ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ.முனியசாமி, பாஜக., மாநில தலைவர் எல்.முருகன், மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் உறுப்பினர் கே.சி.ஆனிமுத்து உள்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்த ரூ.20 லட்சத்திற்கான காசோலையை பழனியின் குடும்பத்தாரிடம் வழங்கினார். பழனியின் மனைவி வானதி தேதி, அவரது குழந்தைகள் , உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்கு பின் முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க பழனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
You must be logged in to post a comment.