இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கண்மாய் கரை எல்லைப்பிடாரி அம்மன் பீடத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா கடந்த பல ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. விழாவில் வழிபாட்டுத் தெய்வமாக கன்னிக்கு கைக்குத்தல் பச்சரிசி சாதம், செம்மறி ஆட்டுக் கிடாய் கறி படைக்கப்பட்டது.முதல்நாடு கிராமத்தைச் சேர்ந்தோரின் முன்னோர் பல தலைமுறைகளுக்கு முன் தமிழகத்தின் தென்கோடி பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு வந்தவர்களில் துர்மரணமடைந்த ஒருவரின் உடல் மாயமானதாக கூறப்படுகிறது. அவரது மரணத்திற்கு காரணமாக சில பெண்கள் என கூறப்படுகிறது. தங்கள் ஊர் எல்லையில் இறந்த அப்பெண் முதல்நாடு கிராம மக்கள் கனவில் தோன்றி தான் கிராம எல்லையில் குடிகொண்டு காவல் தெய்வமாக இருப்பேன், ஆண்டுக்கு ஒரு முறை ஆண்கள் மட்டும் வந்து படையலிட்டு வழிபட வேண்டும், இந்த வழிபாட்டில் பெண்கள் கலந்துகொள்ளக் கூடாது என கூறியதால் ஒவ்வொரு ஆண்டும் ஆண்கள் மட்டும் வழிபடும் திருவிழா புரட்டாசி 3-வது வாரத்தில் நடத்தப்படுவது வழக்கம்.
பல தலைமுறைகளாக நடத்தப்படும் இத்திருவிழா அன்று காட்டுப்பகுதி செல்லும் ஆண்கள் மறைந்த கன்னியின் நினைவாக பீடம் அமைத்து சிறப்பு பூஜை செய்கின்றனர். இதையடுத்து பல நூறு கிலோ கைக் குத்தல் பச்சரியில் சமைத்த சாதத்தை உருண்டை பிடித்து படைப்பதுடன், நூற்றுக்கணக்கான செம்மறி ஆட்டுக் கிடாய்களை பலியிட்டு படைத்து வருகின்றனர்.ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழா முதல்நாடு கிராமம் அருகே காட்டுப்பகுதியில் நேற்று நள்ளிரவு நடந்தது. முதல்நாடு மற்றும் கமுதி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, நெல்லை நகரங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்றனர்.முதல்நாடு கிராம காவல் தெய்வமான அப்பெண் அம்மனுக்கு, கடந்த ஆண்டு விளைவித்த கைக் குத்தல் பச்சரிசியால் வடித்த சாதம், நூற்றுக்கணக்கான ஆடுகளை பலியிட்டு படையலிட்டனர். நடப்பாண்டு நல்ல மழை பெய்ய வேண்டியும், விவசாயம செழிக்கவும் சிறப்பு வழிபாடு நடந்தது.பெண் அம்மனுக்காக பீடத்தின் முன் படையிலிட்ட சாத உருண்டைகள், பலியிட்ட ஆடுகளின் கறி வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது விழா பூஜை பொருட்கள் மற்றும் மீதமாகும் உணவை பெண்கள் பார்க்கக் கூடாது என்பதால், அவற்றை அங்கேயே குழி தோண்டி புதைத்துவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
You must be logged in to post a comment.