ஆர் எஸ் மங்கலம் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 46 பேருக்கு ரூ.10.18 லட்சம் நலத்திட்ட உதவி..
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்மங்கலம் வட்டம் தும்படைக்காகோட்டை கிராமத்தில் வருவாய், பேரிடர் மேலாண் துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு தலைமை வகித்தார். பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாக பெற்றுக் கொண்ட 126 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மக்கள் தொடர்பு திட்டம் தொடர்பாக மக்களிடமிருந்து பெறப்பட்ட 126 முன் மனுக்களை உரிய ஆய்வின் படி தகுதியான 46 பேருக்கு ரூ.10.18 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. இதன்படி, வருவாய், பேரிடர் மேலாண் துறை சார்பில் 3 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, 4 பேருக்கு முதியோர் உதவித்தொகை, கணவரை இழந்த 4 பேருக்கு உதவித்தொகை, 2 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா, 4 பேருக்கு முழுப்புலம் பட்டா, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 4 பேருக்கு தையல் இயந்திரம், வேளாண் துறை சார்பில் 2 பேருக்கு பேட்டரியால் இயங்கும் தெளிப்பான், 2 பேருக்கு உளுந்து சான்று விதைகள், ஒருவருக்கு தோட்டக்கலைத்துறையின் சார்பில் விசைத்தெளிப்பான் கருவிகள், 4 பேருக்கு பழமரத்தொகுப்பு, சமூக நலத்துறை சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டப் பயனாளிகள் 16 பேர் என 46 பேருக்கு ரூ.10.18 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு வழங்கினார். ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ராதிகா பிரபு, மாவட்ட தாட்கோ மேலாளர் தியாகராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் மாரிமுத்து, ஆர்.எஸ்மங்கலம் வட்டாட்சியர் சுவாமிநாதன், துப்படைக்காகோட்டை ஊராட்சி தலைவர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.