அதிவிரைவு பரிசோதனை கருவி (Rapid Testing Kit) வாங்கியதில் முறைகேடு: ஆயிரம் லிட்டர் கிருமி நாசினி தெளித்துக் கழுவினாலும் பாஜக. அதிமுக ஊழல் கரை நீங்காது:-பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்..
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை.
கொரோன வைரஸ் தொற்றை கண்டறிய உதவும் அதிவிரைவு பரிசோதனை சாதனம் (Rapid Testing Kit) வாங்கியதில் சுமார் 18.75 கோடி அளவு ஊழல் நடந்திருப்பதும் இந்த ஊழலில் மத்தியில் ஆளும் பாஜக அரசும் அதற்கு ஆதரவு அளிக்கும் தமிழக அதிமுக அரசும் ஈடுபட்டிருப்பதும் பெரும் அவமானத்திற்குரிய செயலாகும்.
சீனாவில் அதிவிரைவு பரிசோதனை கருவியை இறக்குமதி செய்த நிறுவனத்திற்கும் அதன் வினியோகிப்பாளருக்கும் இடையே நிலுவைத் தொகை தொடர்பாகச் சர்ச்சை எழுந்து அது வழக்காக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதியரசர் நஜ்மி வஜிரி மிக பெரும் ஊழலை வெளிப்படுத்தியுள்ளார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தகவலில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதி விரைவு கருவியின் விலை ரூ.245 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.245க்கு கொள்முதல் செய்ய வேண்டிய இந்த கருவியை மத்திய அரசும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமமும் தமிழக அரசும் ரூ.600க்கு கொள்முதல் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த அதி விரைவு கருவி தொடர்பாகத் தீர்ப்பளித்துள்ள டெல்லி உயர்நீதிமன்றம் நீதியரசர் வஜிரி இக்கருவியை ஜி.எஸ்.டி உட்பட ரூ.400க்கு மிகாமல் விற்பனை செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
ஒரு நேர்மையான நீதிபதி முன்பு இவ்விவகாரம் விசாரணைக்கு வந்ததினால் விசாரணை ஒத்திவைப்பு இல்லாமல் மிக பெரும் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொரோனா முழு முடக்கத்தின் காரணமாகச் சாதாரண சாமானியனிலிருந்து அனைவரும் மிகப் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு தனியார் நிறுவனம் 5 இலட்சம் பரிசோதனை சாதனங்களை ரூ.12.25 கோடிக்கு வாங்கி அதனை ரூ 30 கோடிக்கு விற்பனை செய்து 145% கொள்ளை லாபம்; அடைந்துள்ளது. இந்த நிறுவனம் கேட்ட விலைக்கு ஐசிஎம்ஆரும் தமிழக அரசும் இந்த கருவியை வாங்கியிருப்பது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இவ்வளவு அதிக லாபம் கொடுத்து வாங்கிய கருவியும் பயனற்ற கருவியாக அமைந்து விட்டது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக உள்ளது.
இந்த கருவிகள் திரும்ப அனுப்பப்படுகின்றன. இதற்கான தொகை அளிக்கப்பட மாட்டாது என்று மோடி அரசும் எடப்பாடி அரசும் சொன்னாலும் மிகப் பெரும் இப்பேரிடர் காலத்தில் பாஜக அரசு மீதும் அதிமுக அரசு மீதும் பதிந்துள்ள ஊழல் கறையைப் பல்லாயிரம் லிட்டர் கிருமி நாசினி தெளித்துக் கழுவினாலும் ஊழல் கிருமி நீங்காது.
இப்படிக்கு எம் எச் ஜவாஹிருல்லா தலைவர் மனிதநேய மக்கள் கட்சி
You must be logged in to post a comment.