இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை நேற்று 872 ஆக உயர்வடைந்து இருந்தது. 6,185 பேர் குணமடைந்தும், 20,835 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,892 ஆக உயர்வடைந்திருந்தது.
இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை இன்று 934 ஆக உயர்வடைந்து உள்ளது. 6,869 பேர் குணமடைந்தும், 21,632 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,892ல் இருந்து 29,435 ஆக உயர்வடைந்து உள்ளது.
நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் 8,590 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரு நாளில் 27 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 342ல் இருந்து 369 ஆக உயர்ந்து உள்ளது. 1,282 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இதேபோன்று தமிழகத்தில் 1,937 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 1,101 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கை நேற்று 1,020 ஆக இருந்தது. பலி எண்ணிக்கை 24 ஆக உள்ளது. நமது அண்டை மாநிலங்களான கேரளாவில் 481 பேருக்கும், கர்நாடகாவில் 512 பேருக்கும், ஆந்திர பிரதேசத்தில் 1,183 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதேபோன்று புதுச்சேரியில் 8 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்களில் 3 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். கோவாவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 7 பேரும் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து முழு அளவில் விடுபட்ட நிலையை கோவா அடைந்துள்ளது. அருணாசல பிரதேசம், மணிப்பூர், திரிபுரா ஆகியவையும் கொரோனா பாதிப்பில் இருந்து முழுவதும் விடுபட்டு உள்ளன.
You must be logged in to post a comment.