Home செய்திகள் பணி நிரந்தரம் கோரி கைக்குழந்தைகளுடன் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!..

பணி நிரந்தரம் கோரி கைக்குழந்தைகளுடன் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!..

by ஆசிரியர்

பணி நிரந்தரம் செய்யக்கோரி கை குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் பணி நிரந்தரம் செய்யக்கோரி 200க்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பள்ளிகளில் உடற்கல்வி, கணினி, தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் ஆகிய பாடப்பிரிவுகளில் பத்தாயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் தமிழக முழுவதும் சுமார் 12,200 பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 13 ஆண்டுகளாக தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் போராட்டம் வாயிலாக வலியுறுத்தியும் தற்போது வரை அரசு தங்களை பணி நிரந்தரம் செய்யாமல் உள்ளது என பகுதி நேர சிறப்பாசிரியர்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.

மேலும் கடந்த தேர்தலின் போது திமுக தேர்தல் வாக்குறுதியாக பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்யப்படும் என வாக்குறுதி அளித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழிந்த நிலையிலும் தற்போது வரை பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் திமுக அரசு காலம் தாழ்த்தி வருவதாக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் குற்றம் சாட்டினர்.

இதனையடுத்து தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் கை குழந்தைகளுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com